×

தொடர் மழையால் தண்ணீர் வரத்து அதிகரிப்பு ஓட்டப்பிடாரம் அருகே கால்வாய் உடைப்பு-சீரமைப்பு பணிகளை சண்முகையா எம்எல்ஏ ஆய்வு

ஓட்டப்பிடாரம் : தொடர் மழையால் ஓட்டப்பிடாரம் அருகே வரத்துக் கால்வாய் கரையில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக கடலுக்கு சென்றது. சண்முகையா எம்எல்ஏ உடைப்பை பார்வையிட்டு சீரமைப்பு நடவடிக்கை மேற்கொண்டார்.ஓட்டப்பிடாரம் அருகே ஆரைக்குளத்தில் காட்டாற்று மழை நீரை பிரித்து பல்வேறு குளங்களுக்கு அனுப்பும் வகையில்  பிச்சி மதகு உள்ளது. இந்த மதகில் இருந்து ஒரு கால்வாய் வழியாக ஓட்டப்பிடாரம் பெரியகுளம் மற்றும் அதற்கு அடுத்தடுத்துள்ள குளங்களுக்கும், மற்றொரு கால்வாய் வழியாக குலசேகரநல்லூர், ஓசனூத்து வழியாக புதியம்புத்தூர் மலர்குளம் மற்றும் அடுத்துள்ள குளங்களுக்கு செல்லும் வகையில் வரத்துக் கால்வாய்கள்  அமைக்கப்பட்டுள்ளன. இந்த மதகுகள், வரத்து கால்வாய்கள் அனைத்தும் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஓட்டப்பிடாரம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையால் குலசேகரநல்லூர் வழியாகச் செல்லும் பிரதான கால்வாயில் அதிகளவு தண்ணீர் சென்றதால் கரைகளில் உடைப்பு ஏற்பட்டு வீணாக புதுக்கோட்டை பாலம், கோரம்பள்ளம் ஓடைகள் வழியாக தண்ணீர் கடலுக்கு சென்றது.இதையடுத்து கால்வாய் உடைப்பை சரி செய்யும் பணியில்  அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், இளைஞர்கள் ஈடுபட்டனர். இதுகுறித்து சண்முகையா எம்எல்ஏவிடம் தகவல் தெரிவித்தனர்.  இதனையடுத்து நேற்று அவர், ஓட்டப்பிடாரம் தாசில்தார் நிஷாந்தினி உள்ளிட்ட வருவாய் துறையினருடன் சென்று கால்வாயில் உடைப்பு ஏற்பட்ட இடத்தை பார்வையிட்டார்.இதைதொடர்ந்து உடைப்பு பகுதியில் மணல் மூடைகள் அடுக்கப்பட்டு ஜேசிபி மூலம் உடைப்பு சரிசெய்யும் மேற்கொள்ளப்பட்டது. மேலும்  அப்பகுதியின் வரத்து கால்வாய்களில் மோசமான பகுதிகளையும் பார்வையிட்டு பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதுடன் விரைந்து நடவடிக்கை எடுக்கவும் எம்எல்ஏ வலியுறுத்தினார். எம்எல்ஏ உடன் வருவாய் ஆய்வாளர் கனகவள்ளி,   யூனியன் கவுன்சிலர்கள் மொட்டையசாமி, நவநீதகிருஷ்ணன், ஈஸ்வரி, மேற்கு ஒன்றிய திமுக மாவட்ட பிரதிநிதி ஜோசப் மோகன், பொறியாளரணி மணிகண்டன் உள்ளிட்ட பலர் உடன் சென்றனர்….

The post தொடர் மழையால் தண்ணீர் வரத்து அதிகரிப்பு ஓட்டப்பிடாரம் அருகே கால்வாய் உடைப்பு-சீரமைப்பு பணிகளை சண்முகையா எம்எல்ஏ ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Shanmukhaiya MLA ,Ottapidaram ,Shanmugaiah MLA ,Dinakaran ,
× RELATED சாலை விபத்தில் ஒடிசா வாலிபர் பலி