×

உலகமகா டோல்கேட் ஊழல் :“பரனூர் டோல்கேட்டை” இனி“பா ஜ க மாடல் டோல்கேட்” என்றே அழைக்கலாம்… சு. வெங்கடேசன் எம் பி

சென்னை : நவீன ஊழலின் அடையாளமான பரனூர் டோல்கேட்டை இனி “பாஜக மாடல் டோல்கேட்” என்றே அழைக்கலாம் என்று மதுரை எம்.பி.சு.வெங்கடேசன் எம்.பி, X தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அவர் வெளியிட்டுள்ள செய்தியில்,”ஒன்றிய பாஜக அரசின் ஏழு ஊழல்களைப் பற்றி பேசியுள்ள சி.ஏ.ஜி அறிக்கை ஒரு பெரும் பூகம்பத்தை உருவாக்கியுள்ளது. அதில் முக்கியமான ஒன்றுஒன்று “டோல் கேட்” ஊழல். டோல் கேட்டுகளில் இரண்டு வகை உண்டு. ஒன்று பொதுப் பணத்தில் அமைக்கப்பட்ட சாலைகளில் உள்ள டோல் கேட்டுகள் (Public Funded Toll Gates). இரண்டாவது வகை, தனியார் பணத்தில் அமைக்கப்பட்ட சாலைகளில் உள்ள டோல் கேட்டுகள். (BOT toll gates).

செங்கல்பட்டு – பரனூர் டோல் கேட் அதிகமான வாகனங்கள் கடந்து செல்லும் பொதுப் பணத்தில் அமைக்கப்பட்ட சாலையில் உள்ள டோல் கேட். அதன் வழியாக ஆகஸ்ட் 2019 லிருந்து ஜூன் 2020 வரையிலான காலத்தில் 1, 17, 08, 438 வாகனங்கள் கடந்து சென்றுள்ளன. ஒரு கோடிக்கும் அதிகமான வாகனங்கள் என்பது மலைக்க வைக்கும் எண்ணிக்கை. ஆனால் அதை விட மலைக்க வைக்கிற தகவலை சி.ஏ.ஜி அறிக்கை தருகிறது. அவற்றில் 62,37,152 வாகனங்கள் டோல் கட்டணம் செலுத்தாமல் போன வி.ஐ.பி வாகனங்களாம். பரனூர் டோல் கேட் மட்டுமல்ல. பொதுப் பணத்தில் அமைக்கப்பட்ட சாலைகளில் உள்ள மற்ற டோல் கேட்டுகளிலும் இதுதான் நிலைமை. ஆத்தூர் டோல் கேட் 36 சதவீதம் வாகனங்கள் வி ஐ பி இலவசம். ஜனவரி 2020 முதல் செப் 2020 வரையிலான காலத்தில் கப்பலூர் டோல் கேட் 25 சதவீத வாகனங்கள் வி ஐ பி இலவசம். லம்பாலகுடி 18 சதவீதம்.

தனியார் டோல் கேட்டுகளில் இந்த கணக்கு தலை கீழாக உள்ளது. செங்குறிச்சி டோல் கேட்டும் சென்னை சாலையில்தான் உளுந்தூர் பேட்டை அருகில் உள்ளது. அங்கே ஜனவரி 2020 முதல் செப் 2020 வரை கடந்து சென்ற வாகனங்கள் 49,77, 901. அவற்றில் கட்டணம் கட்டாத விஐபி வாகனங்கள் 12.60 சதவீதம். கணியூர் டோல் கேட் 11.12 சதவீதம். வேலன் செட்டியூர் டோல் கேட் 7.13 சதவீதம். பாளையம் டோல் கேட் 6.93 சதவீதம். வைகுண்டம் டோல் கேட் 6.76 சதவீதம். கொடை ரோடு டோல் கேட் 6.06 சதவீதம்.

பொதுப்பணத்தில் அமைக்கப்பட்ட சாலையான பரனூர் டோல்கேட்டில் 53 சதவிகிதம் வி ஐ பி கள் பயணம் செய்கிறார்கள். அதுவே தனியார்பணத்தில் அமைக்கப்பட்ட கொடைரோடு டோல்கேட்டில் 6 சதவிகிதம் தான் வி ஐ பி கள் பயணம் செய்கிறார்கள். என்றால் எவ்வளவு பெரிய திருட்டுத்தனம் அரங்கேறி இருக்கிறது.சி.ஏ.ஜி அறிக்கை இன்னொரு குண்டை போட்டு இருக்கிறது. விஐபி சென்றார்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் சேகரிக்கப்படவில்லை. பதிவுகள் கூட செய்யப்படவில்லை. தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஜூலை 2021 இல் விளக்கம் தந்துள்ளது. இந்த பொதுப் பண டோல் கேட்டுகளில் தனியார் முகவர்கள்தான் வசூல் பொறுப்பை ஏற்றுள்ளார்கள், வசூல் இடர் எல்லாம் அவர்களின் மொத்த பொறுப்பு, ஆகையால் அரசுக்கு இழப்பு ஏதுமில்லை என்பதே அந்த விளக்கம்.

எனவே வி ஐ பி வாகனம் பற்றி சொல்லப்பட்டுள்ளவிளக்கம் ஏற்கத் தக்கதல்ல என்று சி.ஏ.ஜி அறிக்கையே திருப்பி அடித்துள்ளது. பொதுப் பண டோல்கேட்டுகள் மற்றும் தனியார் டோல் கேட்டுகள் இரண்டிற்கும் விதிகள் ஒன்றுதான். விதிகளை நிறைவேற்றுகிறார்களா என்பதை பார்க்க வேண்டிய பொறுப்பு நெடுஞ்சாலை அமைச்சகத்திற்கு இல்லையா? அரசுக்கு இழப்பு இல்லை என்பது உண்மையா? வாங்கி விட்டு மறைத்தார்களா? வருவாய் வாய்ப்புகளை வைத்துதானே தனியார்களுக்கு வசூல் பொறுப்பு ஒப்படைக்கப்படும்! அப்படி என்றால் எத்தனை மடங்கு தொகையை இவர்கள் வாரிசுருட்டி உள்ளனர்.

இன்னொரு “சுவாரசியமும்” உண்டு. 11.09.1956 க்கு பின்னால் கட்டப்பட்ட பாலங்களில் செல்வதற்குத் தான் டோல் வசூலிக்கப்பட வேண்டும். ஆனால் 1954 இல் கட்டப்பட்ட பரனூர் டோல் கேட் பாலம் ஒன்றின் வழி பயணத்திற்கு 2018 – 2021 இல் 22.10 கோடி வசூல் ஆகியுள்ளது. பரனூர் டோல்கேட் சி ஏ ஜி அறிக்கையால் பலவகையிலும் வரலாற்று சிறப்பு மிக்க டோல்கேட்டாக மாறியுள்ளது.உலகத்திலேயே 50 சதவிகித வி ஐ பி கள் பயணம் செய்யும் பெருமை கொண்ட பரனூர் டோல்கேட்டை நவீன ஊழலின் அடையாளமாக “பா ஜ க மாடல் டோல்கேட்” என்றே அழைக்கலாம்,” எனத் தெரிவித்துள்ளார்.

The post உலகமகா டோல்கேட் ஊழல் :“பரனூர் டோல்கேட்டை” இனி“பா ஜ க மாடல் டோல்கேட்” என்றே அழைக்கலாம்… சு. வெங்கடேசன் எம் பி appeared first on Dinakaran.

Tags : Venkatesan ,Chennai ,Bharanur Tolgate ,Madurai ,Dinakaran ,
× RELATED சென்னை கோயம்பேட்டில் முன்விரோதம் காரணமாக கொலை