பந்தலூர், ஆக.29: பந்தலூர் மேங்கொரேஞ் பகுதியில் நெடுஞ்சாலையில் குறுக்கிட்ட காட்டு யானைகளால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே மேங்கொரேஞ் மற்றும் எலியாஸ் கடை, சேரம்பாடி டேன்டீ, அத்திக்குன்னு உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகள் தேயிலைத்தோட்டங்களில் முகாமிட்டு வருவதால் தேயிலைத்தோட்ட தொழிலாளர்கள், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். நேற்று முன்தினம் மேங்கொரேஞ் தனியார் தேயிலைத்தோட்டம் மற்றும் எலியாஸ் கடை பகுதியில் 3 யானைகள் முகாமிட்டன.
திடீரென யானைகள் நெடுஞ்சாலையில் குறுக்கிட்டதால் பந்தலூரில் இருந்து சேரம்பாடி மற்றும் கேரளா மாநிலம் வயநாடு பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் வாகனங்களை நிறுத்தி யானைகளை சாலையை கடக்க செய்து பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொண்டனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. வனப்பகுதியில் இருந்து குடியிருப்பு பகுதிக்கு வரும் காட்டு யானைகளிடமிருந்து பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கவேண்டும் என பொதுமக்கள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post பந்தலூர் அருகே சாலையை முற்றுகையிட்ட காட்டு யானை கூட்டம் appeared first on Dinakaran.