×

துப்பாக்கி ஏந்திய ரோந்து வாகனம்: எஸ்.பி தொடங்கி வைத்தார்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு நகரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அடுத்தடுத்து இரண்டு கொலை சம்பவங்கள் நடந்துள்ளது. இதனை தொடர்ந்து செங்கல்பட்டு நீதிமன்றம் அருகே மற்றும் ஆட்சியர் அலுவலகம் ஆகிய பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். செங்கல்பட்டு நகர காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் 67 ரவுடிகளும், மற்றும் செங்கல்பட்டு தாலுகா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் 94 ரவுடிகள் உள்ளனர். இந்த நிலையில் குற்ற சம்பவங்களை தடுக்க செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக செங்கல்பட்டு நகர காவல் நிலையம் மற்றும் செங்கல்பட்டு தாலுகா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுத்த செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை திட்டமிட்டிருந்தது.

நேற்று செங்கல்பட்டு நகர காவல் நிலையத்தில் இருசக்கர ரோந்து வாகனத்தை செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்பிரனீத் துவக்கி வைத்தார். இந்த நிகழ்வில் செங்கல்பட்டு மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் பாரத், செங்கல்பட்டு மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் அலெக்ஸ்சாண்டர், செங்கல்பட்டு தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் புகழ், நகர காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் ராஜா, நடராஜன் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் கலந்துக்கொண்டனர். 24 மணி நேரமும் கிரி 45 துப்பாக்கியுடன், பாடி கேமராவுடன் செங்கல்பட்டு தாலுகா மற்றும் நகர காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட 4 இருசக்கர வாகனத்தில் ரவுடிகளை கண்காணிக்க இந்த ரோந்து வாகனத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

The post துப்பாக்கி ஏந்திய ரோந்து வாகனம்: எஸ்.பி தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : S.P. ,Chengalpattu ,Dinakaran ,
× RELATED ஜாமீன் கோரி ராஜேஷ்தாஸ் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு..!!