×

நள்ளிரவு பூஜைக்கு சென்ற சாமியாருக்கு கத்திக்குத்து

செஞ்சி: விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த பெருங்காப்பூரில் கண்ணன் என்பவரது மாந்தோப்பில் நேற்று காலை ஒருவர் ரத்தவெள்ளத்தில் குடல் சரிந்த நிலையில் உயிருக்கு போராடிய நிலையில் கிடந்தார். தகவலறிந்த சத்தியமங்கலம் போலீசார், அவரை மீட்டு செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், அவர் திருவண்ணாமலை மாவட்டம் ஆரடாப்பட்டு கிராமத்தை சேர்ந்த சரவணன்(40). சாமியாரான இவர், கவுரி அருள் வாக்கு மையம் நடத்தி வந்தது தெரியவந்தது.

இதுகுறித்து சாமியார் சரவணன் போலீசாரிடம் கூறுகையில், ‘செஞ்சி, பெருங்காப்பூர் கிராமத்திலிருந்து நள்ளிரவு பூஜை செய்வதற்கு வருமாறு எனக்கு போனில் அழைப்பு வந்தது. இதனையேற்று நேற்று முன்தினம் இரவு நான், நண்பருடன் பெருங்காப்பூர் காளி கோயிலுக்கு வந்தேன். பூஜைக்கு தேவையான ஏற்பாடுகளை செய்யுமாறு கூறிவிட்டு சிறுநீர் கழிக்க சென்றபோது பின்புறமாக வந்த நபர், என் வயிற்றில் கத்தியால் குத்திவிட்டு தப்பிவிட்டார். நான் காப்பாற்றுங்கள் என சத்தம் போட்டது, யாருக்கும் கேட்கவில்லை. இரவு முழுக்க அங்கயே கிடந்தேன்’ என்றார். யார் மீதாவது சந்தேகம் உள்ளதா? என போலீசார் கேட்டபோது, சாமியார் பதிலளிக்க மறுத்துவிட்டார். அவருடன் துணையாக வந்த நண்பரையும் காணவில்லை. சாமியாரின் ஆதார் அட்டையில் மும்பை இருப்பிட முகவரி இருப்பதால் சாமியார் சரவணனிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post நள்ளிரவு பூஜைக்கு சென்ற சாமியாருக்கு கத்திக்குத்து appeared first on Dinakaran.

Tags : Senchi ,Perungapur ,Villupuram district ,Kannan ,
× RELATED கே.வி.குப்பம் அருகே மழையால் வீட்டின்...