
சென்னை: திருவள்ளுவர் நாள் விருதுகள் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. பன்னூறு ஆண்டுகளாக வற்றாத படைப்புக்களைக் கொண்டு. சீரிளமையோடு இயங்கி வரும் தமிழுக்கும், தமிழ்மொழி, பண்பாட்டு வளர்ச்சிக்குத் தொண்டாற்றிடும் தமிழ்த்தாயின் திருத்தொண்டர்களுக்குத் தமிழால் விளங்கிடும் தமிழ்நாடு அரசு பல்வேறு விருதுகளையும் சிறப்புகளையும் அளித்து, அவர்தம் தொண்டுக்கும் தமிழுக்கும் பெருமை சேர்த்து வருகின்றது நீங்கள் அறிந்த ஒன்றே.
அவ்வகையில் எதிர்வரும் 2024-ஆம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருதுக்கும், 2023-ஆம் ஆண்டுக்கான 74 விருதுகளுக்கும் தகைமையும் தொண்டறமும் பூண்ட தமிழறிஞர் பெருமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வேண்டப்படுகின்றன. தகைசான்ற அறிஞர் பெருமக்கள் http://awards.tn.gov.in என்ற இணைய தளத்தின் வழியாகவோ அல்லது தமிழ் வளர்ச்சி இயக்குநர், தமிழ் வளர்ச்சி இயக்ககம், தமிழ்ச்சாலை, எழும்பூர், சென்னை – 600 008 என்ற முகவரிக்கு அஞ்சல் வாயிலாகவோ 15.10.2023 ஆம் நாளுக்குள் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டுகின்றோம்.
தக்க ஆவணங்களோடு விண்ணப்பங்கள் அமைதல் விரும்பத்தக்கது. மேற்கண்ட இணையதளத்திலேயே போதுமான விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. கூடுதல் விவரமறிய விரும்புவோர் 044- 28190412, 044 – 28190413 ஆகிய தொலைபேசி எண்களை அலுவலக நேரத்தில் தொடர்பு கொள்ளலாம். உரிய நாளுக்குள் (15.10.2023) பெறப்படும் விண்ணப்பங்களே ஏற்றுக் கொள்ளப்படும் என்பதை அறிஞர் பெருமக்கள் நினைவிற் கொள்ள அன்புடன் வேண்டுகின்றோம்.
The post திருவள்ளுவர் நாள் விருதுகள் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை விருதுகள் அறிவிப்பு! appeared first on Dinakaran.