- அமைச்சர்
- Senthilpalaji
- நீதிமன்றம்
- சென்னை ஜாம் அமர்வு நீதிமன்றம்
- சென்னை சிறப்பு நீதிமன்றம்
- செந்தில் பாலாஜி
- சிறப்பு நீதிமன்றம்
- ஜாம் அமர்வு நீதிமன்றம்
- தின மலர்
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் செப்டம்பர் 15ம் தேதி வரை நீட்டித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறையில் பணி நியமனத்தில் முறைகேடு நடந்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜியை சட்டவிரோத பண பரிவர்த்தனை தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த ஜூன் 14ம் தேதி கைது செய்தனர். அவருக்கு நெஞ்சுவலி காரணமாக இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னை புழல் மத்திய சிறை மருத்துவமனையில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.
கடந்த முறை வழக்கு விசாரணையின் போது, சிறையில் இருந்து அமைச்சர் செந்தில்பாலாஜி காணொலி காட்சி மூலம் எம்.பி மற்றும் எம்எல்ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். டாக்டர்கள் கண்காணிப்பில் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் தங்க வைக்கப்பட்டு இருப்பதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து செந்தில் பாலாஜிக்கு 3 நாள் காவல் விதிக்கப்பட்டு, சிறப்பு நீதிமன்றத்தில் ஆக.28ம் தேதி நேரில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிட்டார். ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த 3 நாள் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியை சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை நேரில் ஆஜர்படுத்தியது.
புழல் சிறையில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துவரப்பட்டு செந்தில் பாலாஜி நேரில் ஆஜர்படுத்தப்பட்டார். அமலாக்கத்துறை தாக்கல் செய்த சுமார் 3,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை நகல் செந்தில் பாலாஜியிடம் வழங்கப்பட்டது. தொடர்ந்து, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு செப்டம்பர் 15 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டது. அடுத்த காவல் நீட்டிப்புக்கு நேரில் ஆஜராக தேவையில்லை; காணொலி காட்சி மூலமாக ஆஜரானால் போதும் என நீதிபதி தெரிவித்தார். ஜாமின் மனு தாக்கல் செய்தால் விசாரிக்க முடியாது என கூறிய சிறப்பு நீதிமன்ற நீதிபதி, ஜாமின் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தை நாடலாம் என உத்தரவிட்டார்.
The post பண மோசடி வழக்கில் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு செப்.15 வரை காவல் நீட்டிப்பு; ஜாமின் கோரி அமர்வு நீதிமன்றத்தை நாட சிறப்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவு..!! appeared first on Dinakaran.