
சென்னை: மீஞ்சூர் கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தில் வரும் 30ம் தேதி பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால், லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் சீராக நடைபெறும் என்று சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது. சென்னை குடிநீர் வாரியம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மீஞ்சூரில் அமைந்துள்ள நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தில் வரும் 30ம் தேதி காலை 10 மணி முதல் 31ம் தேதி காலை 10 மணி வரை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே, மாற்று ஏற்பாடாக, மாதவரம், மணலி, திருவொற்றியூர், எர்ணாவூர், கத்திவாக்கம், பட்டேல் நகர், வியாசர்பாடி ஆகிய பகுதிகளுக்கு புழல் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து குடிநீர் வழங்கப்படும்.
எனவே, பொதுமக்கள், முன்னெச்சரிக்கையாக, வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். அவசரத் தேவைகளுக்கு வாரியத்தின் https://cmwssb.tn.gov.in/ என்ற இணையதள முகவரியில் பதிவு செய்து லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக் கொள்ளலாம். மேலும், குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகள் மற்றும் அழுத்தம் குறைவான பகுதிகளுக்கு குடிநீர் தொட்டிகள் மற்றும் தெரு நடைகளுக்கு லாரிகள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் எந்தவித தடையுமின்றி வழக்கம் போல் சீரான முறையில் மேற்கொள்ளப்படும்.
The post மீஞ்சூரில் பராமரிப்பு பணி; 30ம் தேதி லாரிகள் மூலம் சீரான குடிநீர் விநியோகம்: சென்னை குடிநீர் வாரியம் அறிவிப்பு appeared first on Dinakaran.