
*பழனி கோயிலுக்கு சென்று திரும்பியபோது சோகம்
தாரபுரம் : தாராபுரம் அருகே கார்-வேன் மோதிய விபத்தில் தாய். மகன் பரிதாபமாக உயிரிழந்தனர்.திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே உள்ள ஓலப்பாளையத்தைச் சேர்ந்தவர் அஜய் பாபு (45). இவர் அங்குள்ள தனியார் வங்கியில் மேலாளராக பணியாற்றி வருகிறார். மாற்றுத்திறனாளியான இவர் நேற்று காலை தனது மனைவி அபிராமி (30), மகள் ஹாசினி (10), அஜய் பாபுவின் தங்கை லலிதா (28) ஆகியோருடன் பழனியில் நடைபெறும் விழாவுக்கு காரில் சென்றார். காரை டிரைவர் ஆனந்தன் (28) என்பவர் ஓட்டி வந்தார்.
தாராபுரத்தை அடுத்த மணக்கடவு என்ற இடத்தில் சென்றபோது அந்த வழியாக வந்த வேனும், காரும் மோதின. அந்த வேனில் ஈரோடு திருநகரை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 12 பேர் இருந்தனர். அவர்கள் பழனி கோயிலுக்கு சென்றுவிட்டு திரும்பி ஈரோடு நோக்கி சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நடந்துள்ளது. இதில், காரில் வந்த அஜய் பாபு, அபிராமி, ஹாசினி, லலிதா, ஆனந்தன் ஆகியோர் காயம் அடைந்தனர்.
வேனில் வந்த திருமூர்த்தி (65) என்பவரது மகன் சரவணன் (18) சம்பவ இடத்தில் பலியானார். திருமூர்த்தி, அவரது மனைவி தேவி (50) மற்றும் சவுமியா (28) ஆகியோர் காயமடைந்தனர். அருகில் இருந்தவர்கள் இந்த விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு தாராபுரம் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தேவி உயிரிழந்தார். அலங்கியம் போலீசார் உயிரிழந்த சரவணன், தேவி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த 7 பேரும் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து குறித்து அலங்கியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
The post தாராபுரம் அருகே கார்-வேன் மோதி தாய், மகன் பலி appeared first on Dinakaran.