சென்னை: சென்னையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பந்த தொழிலாளர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர். இதுகுறித்து பாரத மக்கள் கழகத்தின் தலைவர் வி.பிரபாகரன் வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த 2020ம் ஆண்டு முதல் மூன்று ஆண்டுகளாக கிறிஸ்டல் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ரூ.9 ஆயிரம் மட்டும் மாதந்தோறும் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், பணியாற்ற கூடிய ஒப்பந்த தொழிலாளர்களுக்கான அரியர்ஸ் பணம் மற்றும் பி.எப் பிடித்தம் செய்யாமல் அதற்கு தகுந்த பதிலையும் நிர்வாகம் தரப்பில் இதுவரை அளிக்காமல் இருந்து வருகிறது.
மேலும் வரும் 31ம் தேதி இந்த தொழிலாளர்களுக்கான ஒப்பந்த கான்ட்ராக்ட் முடிவடைகிறது. இந்தநிலையில் பணிபுரிந்த 3 ஆண்டுகளுக்கான தொழிலாளர்களின் அரியர்ஸ் பணம் மற்றும் பி.எப் தொகையை வழங்காமல் காலம் தாழ்த்தி வருவதை கண்டிக்கும் விதமாக சென்னை ஆட்சியர் அலுவலகம் அருகில் பாரத மக்கள் கழகம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் இன்று காலை 10.30 மணிக்கு நடைபெறும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post பாரத மக்கள் கழகம் அறிவிப்பு சென்னையில் இன்று ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.