×

மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நீச்சல் குளத்தில் மூழ்கி 5 வயது சிறுவன் பலி

சென்னை: மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நீச்சல் குளத்தில் குளித்தபோது, நீச்சல் தெரியாமல் 5 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்தார். சென்னை பள்ளிக்கரணை பகுதியை சேர்ந்தவர் ஹரிகரன்(34). இவர் தனது 5 வயது மகன் அனிருத் மற்றும் மனைவியுடன் மெரினா கடற்கரைக்கு நேற்று முன்தினம் மாலை வந்தார். இவர்கள் குடும்பத்துடன் மெரினா கடற்கரையை சுற்றி பார்த்தனர். பின்னர், மெரினா கடற்கரையில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துக்கு சொந்தமான அண்ணா நீச்சல் குளத்தில் ஹரிகரன் தன் மகன் அனிருத்துடன் குளித்துள்ளார்.

அப்போது, திடீரென அனிருத் நீச்சல் குளத்தில் இருந்து மாயமானான். அதிர்ச்சியடைந்த அவரது தந்தை நீச்சல் குளத்தில் உள்ள பயிற்சியாளர்களிடம் ‘என் மகன் குளத்தில் மூழ்கிவிட்டான்’, அவனை காப்பாற்றும்படி கூறியுள்ளார். அவர்கள் நீச்சல் குளத்திற்குள் தேடி, ஆழமான பகுதியில் சிக்கி இருந்த அனிருத்தை மீட்டு திருவல்லிக்கேணி கஸ்தூரிபா காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் அதிகளவில் தண்ணீர் குடித்ததால் மூச்சுக் குழாயில் தண்ணீர் புகுந்து விட்டது.

எனவே, சிறுவன் அனிருத் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அதைகேட்டு அனிருத்தின் பெற்றோர் கதறி துடித்தனர். பின்னர், சிறுவன் உடலை அண்ணாசதுக்கம் போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சிறுவன் நீச்சல் குளத்தில் உயிரிழந்தது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதேநேரம், சிறுவன் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மறு உத்தரவு வரும் வரை நீச்சல் குளத்தை மூடி உத்தரவிட்டுள்ளது.

The post மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நீச்சல் குளத்தில் மூழ்கி 5 வயது சிறுவன் பலி appeared first on Dinakaran.

Tags : Anna swimming pool ,Marina Beach ,Chennai ,Dinakaran ,
× RELATED கடலில் பிளாஸ்டிக், ரசாயனம் கலப்பதை தடுக்க விழிப்புணர்வு படகு பயணம்