×

இன்ஜினியரிங் 3 சுற்று கலந்தாய்வு முடிந்தது 1.06 லட்சம் இடங்கள் நிரம்பின: பொறியியல் படிப்பு மோகம் மீண்டும் அதிகரிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் இன்ஜினியரிங் படிப்புக்காக நடந்த 3 சுற்று கலந்தாய்வின் முடிவில், 1 லட்சத்து 6 ஆயிரத்து 641 மாணவர்கள் தங்களுக்கு பிடித்த கோர்ஸ் மற்றும் கல்லூரிகளை போட்டி போட்டு தேர்வு செய்தனர். மேலும், கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு இன்ஜினியரிங் படிக்கும் ஆர்வம் மாணவர்களிடம் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு முழுவதும் உள்ள 442 இன்ஜினியரிங் கல்லூரிகளில், 1 லட்சத்து 57,378 இடங்கள், பல்வேறு பாடப்பிரிவுகள் உள்ளன. இன்ஜினியரிங் படிக்க விரும்பம் மாணவர்களுக்கான கலந்தாய்வு மொத்தம் 3 சுற்றுகளாக நடத்தப்பட்டு வருகிறது.

இதில் முதல் சுற்று கலந்தாய்வில் 16 ஆயிரத்து 96 இடங்கள் நிரம்பின. 2வது சுற்று கலந்தாய்வு முடிவில் 40,741 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து 3வது சுற்று கலந்தாய்வு கடந்த 22ம் தேதி தொடங்கியது. அதன்படி, 3வது சுற்று கலந்தாய்வில் பொதுப் பிரிவில் 44 ஆயிரத்து 932 இடங்களும், அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கான 7.5% உள் ஒதுக்கீட்டு பிரிவில் 4,097 இடங்களும் என 49,029 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்த கலந்தாய்வில் ஒதுக்கீட்டு ஆணை பெற்றவர்கள், அந்தந்த கல்லூரிகளில் வருகிற 31ம் தேதிக்குள் சேர வேண்டும். இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் இந்த 3 சுற்றுகளையும் சேர்த்து, மொத்தம் உள்ள ஒரு லட்சத்து 57,378 இடங்களில், பொதுப் பிரிவில் 1 லட்சத்து 5,866 இடங்கள், சிறப்பு பிரிவில் 775 இடங்கள் என 1 லட்சத்து 6 ஆயிரத்து 641 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதனையடுத்து வருகிற 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை துணை கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. இதில் காலியாக உள்ள இடங்களுக்கான கலந்தாய்வு நடத்தப்படும்.

இதன் மூலம் இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை, கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அதிகரித்துள்ளது. இந்த புள்ளிவிவரங்கள் மூலம் தமிழக மாணவர்களிடம் மீண்டும் இன்ஜினியரிங் படிக்கும் மோகம் அதிகரித்து இருப்பது தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டில் இன்ஜினியரிங் கவுன்சலிங்கில் வெறும் 92 ஆயிரம் இடங்கள் மட்டுமே நிரம்பின. செப்டம்பர் 11ம் தேதிக்கு பிறகு தான் முழு விவரங்கள் தெரியவரும்.

The post இன்ஜினியரிங் 3 சுற்று கலந்தாய்வு முடிந்தது 1.06 லட்சம் இடங்கள் நிரம்பின: பொறியியல் படிப்பு மோகம் மீண்டும் அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamil Nadu ,
× RELATED கடும் வெயில்.. சென்னை மக்கள் வெளியே...