×

எர்ணாகுளம்-வேளாங்கண்ணி விரைவு ரயில் நிரந்தரம்: பயணிகள் மகிழ்ச்சி

பட்டுக்கோட்டை: எர்ணாகுளம்-வேளாங்கண்ணி விரைவு ரயில் நிரந்தரமாக்கப்படுகிறது. இதனால் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கடந்த 2022ம் ஆண்டு ஜூன் மாதம் 4ம்தேதி முதல் எர்ணாகுளம்-வேளாங்கண்ணி-எர்ணாகுளம் வாரந்தர சிறப்பு விரைவு ரயில் எர்ணாகுளத்தில் புறப்பட்டு வேளாங்கண்ணி வரை சென்று மீண்டும் எர்ணாகுளத்திற்கு வந்தடைந்து இயங்கி வருகிறது. இந்த ரயில் சனிக்கிழமை மதியம் 12.30 மணிக்கு எர்ணாகுளத்தில் புறப்பட்டு கோட்டயம், செங்கனாச்சேரி, திருவல்லா, செங்கனூர், மாவலிக்கரா, காயங்குளம், சாஸ்தா கோட்டா, கொல்லம், குந்தாரா ,கொட்டாரக்கரா, புனலூர், தென்மலை, செங்கோட்டை, கடையநல்லூர், சங்கரன்கோயில், ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை, காரைக்குடி, அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், திருத்துறைப்பூண்டி, திருவாரூர், நாகப்பட்டினம் வழியாக அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 05.50 மணிக்கு வேளாங்கண்ணி வந்தடைந்து மீண்டும் இந்த ரயில் ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணிக்கு வேளாங்கண்ணியில் புறப்பட்டு இதே வழித்தடத்தின் வழியாக திங்கட்கிழமை நண்பகல் 11.40 மணிக்கு எர்ணாகுளத்தை சென்றடைந்து வருகிறது.

வாரம் ஒரு முறை மட்டும் இயங்கிவந்த இந்த சிறப்பு விரைவு ரயிலை புதுடெல்லி ரயில்வே வாரியம் வாரம் இருமுறை நிரந்தரமாக இயங்கும் வகையில் உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவின்படி எர்ணாகுளம்-வேளாங்கண்ணி விரைவு ரயில் ( வண்டி எண் 16361) எர்ணாகுளத்தில் சனிக்கிழமை நண்பகல் 12.35 மணிக்கு புறப்பட்டு மறுநாள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 05.50 மணிக்கு வேளாங்கண்ணியை வந்தடையும். மீண்டும் இந்த வேளாங்கண்ணி-எர்ணாகுளம் விரைவு ரயில் (வண்டி எண் 16362) வேளாங்கண்ணியில் ஞாயிற்றுக்கிழமை மாலை 06.30 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் திங்கட்கிழமை நண்பகல் 12.00 மணிக்கு எர்ணாகுளத்தை வந்தடையும். மீண்டும் எர்ணாகுளத்தில் இருந்து திங்கட்கிழமை நண்பகல் 12.35 மணிக்கு புறப்பட்டு செவ்வாய்க்கிழமை அதிகாலை 05.50 மணிக்கு வேளாங்கண்ணியை வந்தடையும். மீண்டும் செவ்வாய்க்கிழமை மாலை 6.30 மணிக்கு வேளாங்கண்ணியிலிருந்து புறப்பட்டு புதன்கிழமை நண்பகல் 12 மணிக்கு எர்ணாகுளத்தை வந்தடையும்.

இந்த விரைவு ரயில் கோட்டயம், செங்கனாச்சேரி, திருவல்லா, செங்கனூர், காயங்குளம், கொல்லம், கொட்டாரக்காரா, புனலூர், செங்கோட்டை, ராஜபாளையம், சிவகாசி விருதுநகர், அருப்புக்கோட்டை, காரைக்குடி, அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, திருத்துறைப்பூண்டி, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய இடங்களில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் நிரந்தர ரயிலாக இயக்கப்படுவதற்கு இப்பகுதி ரயில் பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.
தமிழ்நாடு, கேரளா இரண்டு மாநிலங்களை இணைக்கும் தேசிய ஒருமைப்பாட்டு ரயிலாகவும், சபரிமலை ஐயப்பன் கோயில், வேளாங்கண்ணி மாதா கோயில், நாகூர் தர்கா, சிக்கல் சிங்காரவேலர் ஆலயம் போன்ற மும்மதங்களின் வழிபாட்டு தலங்களை இணைக்கும் மத நல்லிணக்க ரயிலாகவும் எர்ணாகுளம்-வேளாங்கண்ணி விரைவு ரயில் விளங்குகிறது.

இந்த விரைவு ரயில் முன்பு சிறப்பு விரைவு ரயிலாக இயங்கும்போது நிறுத்தப்பட்ட இடங்களில் மீண்டும் நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் ரயில் பயணிகள் நலச்சங்கங்களின் சார்பில் வைக்கப்பட்டு வருகிறது. இந்த விரைவு ரயில் பேராவூரணி மற்றும் அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் நிறுத்தி செல்ல வேண்டும் என திருச்சி கோட்ட ரயில்வே உபயோகிப்போர் ஆலோசனைக்குழு உறுப்பினரும், பட்டுக்கோட்டை வட்ட ரயில் பயணிகள் நலச்சங்க தலைவருமான ஜெயராமன் திருச்சி கோட்ட ரயில்வே உயரதிகாரிகளை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தும், நிரந்தர ரயிலாக இயக்கப்படுவதற்கு நன்றி தெரிவித்தும் வந்துள்ளார். இந்த ரயில் இயங்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிகிறது.

The post எர்ணாகுளம்-வேளாங்கண்ணி விரைவு ரயில் நிரந்தரம்: பயணிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Ernakulam ,Palukkotta ,Ernakulum ,agarangni ,Agrigandani ,
× RELATED கேரளாவில் ஓடும் ரயிலில் குமரி மாடல் அழகியிடம் அத்துமீறிய வாலிபர் கைது