×

பட்டரவாக்கம் அருகே ரயில் தண்டவாளத்தில் இளம்பெண் சடலம் மீட்பு: கொலையா என விசாரணை

 

அம்பத்தூர், ஆக. 27: பட்டரவாக்கம் – கொரட்டூர் ரயில் நிலையங்கள் இடையே எக்ஸ்பிரஸ் ரயில் பாதையில் வடமாநில தொழிலாளியான 20 வயது இளம்பெண் சடலமாக மீட்கப்பட்டார். ஓடும் ரயிலிலிருந்து கீழே தள்ளி கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு காரணமா என பெரம்பூர் ரயில்வே போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கொரட்டூர் அடுத்த பட்டரவாக்கம் அருகே கருக்கு மேம்பாலத்தின் கீழே ரயில் தண்டவாள பகுதியில் இளம்பெண் ஒருவர் சடலமாக கிடப்பதாக அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்திற்கு அப்பகுதி மக்கள் தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து விரைந்து வந்த அம்பத்தூர் தொழிற்பேட்டை இன்ஸ்பெக்டர் ஜெயகிருஷ்ணன் விசாரணை நடத்தினார். பின்னர் பெரம்பூர் ரயில்வே போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அதில், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளி பிரீத்தி (20) என்பது தெரியவந்தது. மேலும், இவர் சென்ட்ரல் நோக்கி ரயிலில் பயணிக்கும்போது கீழே தள்ளிவிடப்பட்டாரா அல்லது தண்டவாளத்தை கடக்கும் போது ரயிலில் அடிபட்டாரா அல்லது யாரேனும் கொலை செய்து இங்கே வீசிவிட்டு சென்றார்களா, என்கிற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இளம்பெண்ணின் சடலம் கிடந்த இடத்திலிருந்து 10 மீட்டர் தொலைவில் அவருடைய செல்போன் கண்டெடுக்கப்பட்டது. அந்த செல்போன் மூலம் தொடர்பு கொண்ட நபர் ஒருவர், பிரீத்தி என பெயர் சொல்லி பேசியதால் இளம்பெண்ணின் பெயர் ப்ரீத்தி என்கிற விவரம் தெரிய வந்தது. மேலும் உடலை கைப்பற்றிய பெரம்பூர் ரயில்வே காவல் துறையினர், பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பட்டரவாக்கம் அருகே ரயில் தண்டவாளத்தில் இளம்பெண் சடலம் மீட்பு: கொலையா என விசாரணை appeared first on Dinakaran.

Tags : Pattaravackam ,Ambattur ,North State ,Koratur ,Dinakaran ,
× RELATED கூகுள் மேப்பால் விபரீதம்; சென்னையில் 7...