×

திருவள்ளூர் கோளூர் கிராம ஏரியில் விதி மீறி மண் அள்ளுவதை எதிர்த்து வழக்கு: மாவட்ட கலெக்டர் பதில் தர ஐகோர்ட் உத்தரவு

 

திருவள்ளூர், ஆக. 27: திருவள்ளூர் மாவட்டம் கோளூர் கிராமத்தில் உள்ள ஏரியில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக அளவில் மண் அள்ளப்படுகிறதா என்று ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுகா கோளூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் ஆனந்தன், சரவணன் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொது நல மனுவில், தங்கள் ஊரில் உள்ள 185 ஏக்கர் பரப்பளவில் பரவிய பெரிய எரியை நம்பி 730 ஏக்கர் விளை நிலங்கள் உள்ளது.

ஏரியில் 50 நாட்களுக்கு மட்டும் மண் அள்ள கடந்த ஏப்ரல் 21ம் தேதி மாவட்ட கலெக்டர் பல்வேறு நிபந்தனையுடன் அனுமதி அளித்தார். இந்த நிலையில், மூன்று அடி ஆழத்திற்கு மட்டுமே மண் அள்ள வேண்டும் என்ற நிபந்தனையை மீறி ஒப்பந்ததாரர் பரத் என்பவர் ஐந்து அடிக்கு மேல் மண் அள்ளுகிறார். இதனால் ஏரியின் நீர்மட்டம் குறைந்து விளைநிலம் பாதிப்படுவதாலும் நிலத்தடி நீர் குறைந்தும் வருகிறது.

எனவே, இந்த ஏரியில் மண் அள்ளுவதற்கு தடை விதிக்க வேண்டும். மண் அள்ள அனுமதி வழங்கிய மாவட்ட கலெக்டரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியுள்ளனர். இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வலா, நீதிபதி ஆதிகேசவலு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கில் செப்டம்பர் 4 தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும். புகார் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.

The post திருவள்ளூர் கோளூர் கிராம ஏரியில் விதி மீறி மண் அள்ளுவதை எதிர்த்து வழக்கு: மாவட்ட கலெக்டர் பதில் தர ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Kollur village lake ,Tiruvallur ,Thiruvallur ,Kollur ,Tiruvallur district ,
× RELATED திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த...