×

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கால்வாய்களை தூர்வாரும் பணிகள் தீவிரம்: நீர்நிலைகளை கண்காணிக்க கேமரா

 

சென்னை, ஆக.27: பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் கால்வாய்களை தூர்வாரும் பணிகள் மாநகராட்சி சார்பில் நடைபெற்று வருகிறது. மேலும், சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டு, நீர்நிலைகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால், சென்னையில் மாநகராட்சி சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, நகரின் முக்கிய பகுதிகளில் தண்ணீர் தேங்காமல் இருக்க வடிகால், நீர்நிலைகள் உள்ளிட்டவற்றை தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது.

மேலும், 144 மின் மோட்டார்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளதாகவும், நீர்நிலைகளை தூர்வாரும் பணிகளை துரிதமாக முடிக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுத்தப்பட்டுள்ளது. சென்னையில், மழைநீர் தேங்குவதை தடுக்க கால்வாய்களை சரிசெய்வது முக்கியமான வேலையாக இருக்கிறது. அந்த வகையில், மயிலாப்பூர், நுங்கம்பாக்கம், மாம்பலம் உள்ளிட்ட 33 கால்வாய்களில் 53 கிலோ மீட்டர் தொலைவுக்கு தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பல இடங்களில் கால்வாய்களில் பொதுமக்கள் குப்பையை கொட்டுவதால் மழைக் காலங்களில் நீரோட்டம் தடைபட்டு, தண்ணீர் தேங்கும் நிலை உளளது.

எனவே, நீர்நிலைகள், கால்வாய்களில் குப்பை கொட்டப்படுவதை தடுக்க 200 இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட இருப்பதாகவும், ரூ.232 கோடி செலவில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இவ்வாறு நீர்நிலைகளில் பொருத்தப்படும் சிசிடிவி கேமராக்களை 24 மணி நேரமும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கண்காணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம் அலட்சியமாக நீர்நிலைகளில் குப்பை கொட்டுபவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘‘சென்னையில் சேகரிக்கப்படும் குப்பையில் 60 சதவீதம் வீடுகளிலேயே தரம் பிரிக்கப்பட்டு விடுகிறது.

ஆனால், 100 சதவீதம் தரம்பிரிக்கப்பட்டு மறுசுழற்சி செய்ய வேண்டும் என்பதே மாநகராட்சியின் இலக்காக உள்ளது. அதன் காரணமாக, குப்பையை தரம் பிரித்து கொடுக்க பொதுமக்கள் பழகிக்கொள்ள வேண்டும். சென்னையில் மழைநீர் தேங்குவதை தடுக்க கால்வாய்களை தூர்வாரும் பணி மாநகராட்சி சார்பில் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. பொதுமக்கள் கால்வாய்களில் குப்பையை கொட்டாமல், மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்,’’ என்றனர்.

The post பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கால்வாய்களை தூர்வாரும் பணிகள் தீவிரம்: நீர்நிலைகளை கண்காணிக்க கேமரா appeared first on Dinakaran.

Tags : Chennai ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...