×

ஐசிஎப் தொழிற்சாலையில் சாதாரண வந்தே பாரத் ரயில் தயாரிப்பு: 2 மாதங்களில் பயன்பாட்டிற்கு வருகிறது

 

சென்னை, ஆக.27: சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் 8 முன்பதிவு இல்லாத பெட்டிகள் உள்பட 22 பெட்டிகளுடன் சாதாரண வந்தே பாரத் ரயில் தயாரிப்பு பணி தொடங்கியுள்ளது. அடுத்த 2 மாதங்களில் 2 ரயில்களை பயன்பாட்டுக்கு கொண்டுவர ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது. சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் கடந்த 2018ம் ஆண்டு வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. அதே ஆண்டின் இறுதியில் முதல் வந்தே பாரத் ரயில் உருவாக்கப்பட்டு ஒன்றிய ரயில்வே வாரியத்திடம் வழங்கப்பட்டது. இதையடுத்து, இந்தியாவின் அதிவேக ரயில் சேவையாக அறியப்படும் வந்தே பாரத் ரயிலின் முதல் சேவையை புதுடெல்லி – வாரணாசி இடையே பிரதமர் மோடி 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கி வைத்தார்.

இந்த ரயிலில் தானியங்கி கதவுகள், வைபை, ஜிபிஎஸ், ஆடியோ, வீடியோ, பயோ டாய்லெட்டுகள் இப்படி பல வசதிகள் இதில் உள்ளன. முழுவதும் குளிரூட்டப்பட்ட பெட்டிகள், சுழலும் இருக்கைகள், தொடுதிரை வசதிகள், என பல்வேறு சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன. அதிக வேகம், விமானம் போன்று சொகுசான இருக்கைகள் என பல சிறப்பு அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்ட வந்தே பாரத் ரயில்கள், பயணிகள் இடையே வரவேற்பை பெறத் தொடங்கியுள்ளது. இதனையடுத்து, நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டன. தமிழ்நாட்டில் முதல் வந்தே பாரத் ரயில் சேவையாக சென்னை – மைசூரு இடையே இயக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து, தமிழ்நாட்டிற்குள் இயங்கும் வகையில் சென்னை – கோவை மார்க்கத்திலும் வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. தற்போது, 25 வழித்தடங்களில் நாடு முழுவதும் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பொதுவாக வந்தே பாரத் ரயில்களில் அதிக கட்டணம் வசூல் செய்யப்படுவதாக புகார்கள் எழுகின்றன. இதனை கருத்தில் கொண்டு சாதாரண வந்தே பாரத் ரயில்களை தயாரிக்கும் பணியை ரயில்வே நிர்வாகம் தொடங்கியுள்ளது. முன்பதிவு இல்லாத 8 பெட்டிகள், 3ம் வகுப்பு ஏசி பிரிவில் 12 பெட்டிகள் உள்ளிட்ட 22 பெட்டிகளுடன் இந்த ரயிலை தயாரிக்கும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இன்னும் 2 மாதங்களில் 2 சாதாரண ரயில்களை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு, ரயில்வே வாரியம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அதனை கருத்தில் கொண்டு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதற்கான இன்ஜின் மேற்கு வங்கத்தில் உள்ள சித்தரஞ்சன் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட இருக்கிறது. சாமானிய மக்களும் வந்தே பாரத் ரயிலில் செல்ல ஏதுவாக குறைவான கட்டணத்தில் இந்த ரயில்கள் இயக்கப்பட உள்ளன. சாதாரண வந்தே பாரத் ரயில்கள் பயன்பாட்டிற்கு வந்த பிறகு கட்டணம் வெகுவாக குறையும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், ‘‘வந்தே பாரத் ரயில் போன்ற வசதிகளோடு சில மாற்றங்களை செய்து, சாதாரண வந்தே பாரத் ரயிலுக்கான பெட்டிகள் தயாரிப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த ரயிலில், தனியாக இன்ஜின்கள் இருபுறமும் பொருத்தப்படும். இந்த ரயிலில், 8 முன்பதிவு இல்லாத பெட்டிகள், மூன்றாம் வகுப்பு ‘ஏசி’ பிரிவில் 12 பெட்டிகள், மாற்றுத் திறனாளிகள், லக்கேஜ் உட்பட மொத்தம் 22 பெட்டிகள் இருக்கும். இந்த வகை ரயில்பெட்டி தயாரிப்பு பணி தொடங்கப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் மாதத்துக்குள் 2 ரயில்கள் தயாரித்து, பயன்பாட்டுக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது,’’ என்றார்.

The post ஐசிஎப் தொழிற்சாலையில் சாதாரண வந்தே பாரத் ரயில் தயாரிப்பு: 2 மாதங்களில் பயன்பாட்டிற்கு வருகிறது appeared first on Dinakaran.

Tags : Vande Bharat ,ICF factory ,Chennai ,Normal Vande ,ICF Factory Bharat ,Dinakaran ,
× RELATED ரயில் பயணிகளுக்கு பெருத்த ஏமாற்றம்;...