×

நாகப்பட்டினத்தில் சமூக தொண்டாற்றி வரும் அரசு துறையை சேர்ந்த 8 பணியாளர்கள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நினைவுப் பரிசுகள் வழங்கி பாராட்டு

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நாகப்பட்டினம் மாவட்டத்தில் சிறந்த முறையில் சமூக தொண்டாற்றி வரும் அரசுத் துறையைச் சேர்ந்த 8 பணியாளர்கள் மற்றும் சிறந்த முறையில் சமூக தொண்டாற்றி வரும் 4 தொண்டு நிறுவனங்களின் நிர்வாகிகள் ஆகியோரை பாராட்டி, நினைவுப் பரிசுகள் வழங்கி சிறப்பித்தார்.

சிறந்த சமூக சேவையாற்றிய அரசுத் துறை பணியாளர்கள்

நாகப்பட்டினம் நகராட்சியில் தூய்மைப் பணியாளராக பணிபுரிந்து வரும் ஜீ. ஜெயராமன் , கடந்த 15 ஆண்டுகளாக நாகப்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட 6 வார்டுகளில் கழிவுநீர் கால்வாய்களை சுத்தம் செய்து கொசு மருந்து தெளிக்கும் பணியை சிறப்பாக மேற்கொண்டு பொதுமக்களிடம் பாராட்டு பெற்றுள்ளார்.

ஏனங்குடி அரசு ஆரம்ப சகாதார நிலையத்தில் துணை செவிலியராக பணிபுரிந்து வரும் பி. காந்திமதி, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் அதிக பிரசவங்களை கையாண்டு, தாய் மற்றும் சிசு இறப்பின்றி மகப்பேறு பணிகளை சிறப்பாக மேற்கொண்டு வருகிறார்.

வேதாரண்யம், ஆறுகாட்டுத்துறை குழந்தைகள் மையத்தில் குழந்தைகள் மைய உதவியாளராக பணிபுரிந்து வரும் ஆர். முருகேஸ்வரி , குழந்தைகளின் வீடுகளுக்கே சென்று குழந்தைகளை மையத்திற்கு அழைத்து வருவதோடு, அங்குள்ள 30 குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவுகளை சரியான நேரத்தில் அளித்து தனி கவனம் செலுத்தி பெற்றோர்களின் பாராட்டுகளை பெற்று வருகிறார்.

தெத்தி, நிஜாம் காலனி அங்கன்வாடி பணியாளராக பணிபுரிந்து வரும் எஸ். சம்ஸத்பேகம், குழந்தைகளுக்கு நல்ல பழக்கவழக்கங்களை கற்றுத் தருவதோடு, சுத்தமாகவும், சுகாதாரமாகவும் மையத்தை பராமரித்து, அங்குள்ள 15 குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவுகளை சரியான நேரத்தில் அளித்து தனி கவனம் செலுத்தி பெற்றோர்களின் பாராட்டுகளை பெற்று வருகிறார்.

வேதாரண்யம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மண்டல அலுவலக மீன்வள மேற்பார்வையாளராக பணிபுரிந்து வரும் எஸ்.சி. விக்னேஷ்வர், கடந்த 31.1.2023 அன்று படகு கவிழ்ந்து கடலில் தத்தளித்த புஷ்பவனம் மற்றும் நாலுவேதபதி கிராமங்களை சேர்ந்த 3 மீனவர்களை படகில் சென்று காப்பாற்றியது, கடலில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் காயமடையும் போது அவர்களை உரிய நேரத்தில் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை அளிப்பது போன்ற பணிகளை சிறப்பாக மேற்கொண்டு வருகிறார்.

நாகப்பட்டினம் வட்டம், புத்தகரம் கிராமத்தின் கிராம உதவியாளராக பணிபுரிந்து வரும் எம். சேகர், விடுப்பு எடுக்காமல் அனைத்து பணி நாட்களிலும் சிறந்த முறையில் பணியாற்றி அக்கிராம மக்கள் மற்றும் உயரதிகாரிகளின் நற்பெயரை பெற்றுள்ளார்.

கீழவேளூர் காவல் நிலைய முதல் நிலை காவலராக பணிபுரிந்து வரும் விக்னேஷ், கீழ்வேளூர் பகுதியில் உண்டியல் திருடர்கள் பற்றிய இரகசிய தகவல்களை அளித்து அவர்களை கைது செய்வதற்கு உதவியது, எரிசாராயம் கடத்தியவர்களை துரத்தி பிடித்தது, தனிப்பிரிவு தொடர்பான தகவல்களை உடனுக்குடன் காவல்துறை உயரதிகாரிகளுக்கு அளித்து திருட்டுகள் மற்றும் மோதல் சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பது போன்ற பல்வேறு பணிகளை சிறப்புடன் மேற்கொண்டு வருகிறார்.

தலைஞாயிறு தீயணைப்பு நிலைய தீயணைப்பு ஓட்டுநராக பணிபுரிந்து வரும் எம். அய்யாதுரை , நீர்முளை அரசு ஆரம்ப சுகாதார நிலைய கழிவறை கோப்பைக்குள் சிக்கிக் கொண்ட தாஷிகா என்ற 8 வயது சிறுமியை பத்திரமாக மீட்டு அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளார்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய அரசுத் துறையைச் சேர்ந்த ஜீ. ஜெயராமன், பி. காந்திமதி, ஆர். முருகேஸ்வரி, எஸ். சம்ஸத்பேகம், எஸ்.சி. விக்னேஷ்வர், எம். சேகர், விக்னேஷ், எம். அய்யாதுரை ஆகியோரது சேவைகளைப் பாராட்டி முதலமைச்சர் நினைவுப் பரிசுகளை வழங்கினார்.

சிறந்த சமூக சேவையாற்றிய தொண்டு நிறுவனங்களின் நிர்வாகிகள்

நாகப்பட்டினத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சி. இராஜேந்திரன், கடந்த 10 ஆண்டுகளாக ஆதரவின்றி உயிரிழந்தவர்களின் உடல்கள், முதியோர் இல்லங்களில் இறப்பவர்கள், வசதி இல்லாதவர்கள் மற்றும் மருத்துவமனைகளில் அடையாளம் தெரியாத பிணக்கூறு செய்யப்பட்ட உடல்கள் ஆகியவற்றை உரிய மரியாதையுடன் தனது சொந்த செலவில் ஈமச்சடங்குகள் செய்து நல்லடக்கம் செய்து வருகிறார்.வள்ளலார் தருமச்சாலையைச் சேர்ந்த சமூக ஆர்வலரும், வேதாரண்யம் நகராட்சி குழந்தைகள் நல பாதுகாப்பு உறுப்பினருமான மு.வெற்றியழகன், மாற்றுத்திறனாளிகள், மனநலம் பாதிக்கப்பட்டோர் மற்றும் முதியவர்களுக்கு தினசரி மூலிகை கஞ்சி வழங்குவது, இடம் பெயர்ந்து வரும் மனநலம் குன்றியவர்களுக்கு உணவு, உடை மற்றும் மருந்து வழங்குவது, வள்ளலார் எக்ஸ்னோரா மூலம் மரக்கன்றுகள் வழங்குவது, குழந்தைகள் மற்றும் பெண்கள் உரிமைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மரக்கன்றுகள் நடுதல், பாரம்பரிய உணவு திருவிழா, பேரிடர் விழிப்புணர்வு முகாம், இயற்கை விவசாய விழிப்புணர்வு, டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு, பனை விதைகள் விதைப்பு முகாம் போன்ற பல்வேறு சமூக நலப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

வேதாரண்யம், ஈகா அறக்கட்டளையின் நிர்வாகியும் சமூக ஆர்வலருமான மோகன இராஜசேகரன் , தோப்புத்துறையில் ஈகா அறக்கட்டளையை தொடங்கி, தாய், தந்தை இல்லாத குழந்தைகளின் கல்விக்கு உதவி செய்வது, சாலையோரத்தில் வசிக்கும் ஆதரவற்ற முதியோர்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டு சாலையில் சுற்றி திரிபவர்களுக்கு மூன்று வேளை உணவு வழங்குவது, வேதாரண்யம் மூன்றாம் தெருவில் தைத்தடி முதியோர் இல்லத்தை தொடங்கி ஆதரவற்ற முதியோர்களுக்கு உணவு, உறைவிட வசதி ஏற்படுத்தி தருவது, பொதுமக்களிடம் நிதி திரட்டி, பொருளாதார பின்புலம் இல்லாத நலிந்த மக்களுக்கு மருத்துவ உதவி மற்றும் குழந்தைகளுக்கு உயர்தர அறுவை சிகிச்சைக்கான உதவிகளை செய்வது போன்ற பல்வேறு சமூக நலப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.வேளாங்கண்ணி, உதவிக் கரங்கள் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தின் நிர்வாகி ஆண்டனி பிரங்ளின் ஜெயராஜ், தினமும் 100 நபர்களுக்கு ஸ்பான்ஸர்ஸ் மூலமாக மதிய உணவு வழங்குவது, உதவி கரங்கள் ஆம்புலன்ஸ் சேவை, வேளாங்கண்ணி கடற்கரையில் உதவி கரங்கள் கடல் மீட்பு குழுவினர் மூலம் கடலில் மூழ்கி தத்தளிக்கும் நபர்களை மீட்க உதவி செய்வது போன்ற பல்வேறு சமூக நலப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் சிறந்த முறையில் சமூக தொண்டாற்றி வரும் சி. இராஜேந்திரன், மு. வெற்றியழகன், மோகன இராஜசேகரன், ஆண்டனி பிரங்ளின் ஜெயராஜ் ஆகியோரது சேவைகளைப் பாராட்டி முதலமைச்சர் நினைவுப் பரிசுகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ.பெரியசாமி, பொதுப்பணித் துறை அமைச்சர்
எ.வ. வேலு, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சட்டத் துறை அமைச்சர் எஸ். இரகுபதி, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர். அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஜானி டாம் வர்கீஸ், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post நாகப்பட்டினத்தில் சமூக தொண்டாற்றி வரும் அரசு துறையை சேர்ந்த 8 பணியாளர்கள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நினைவுப் பரிசுகள் வழங்கி பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Government Department of Social Tolerance ,Nagapattinam ,Chief Minister ,G.K. ,Stalin ,Chennai ,G.K. Stalin ,Nagapattinam District Guror ,Office ,B.C. G.K. Stalin ,Dinakaran ,
× RELATED நாகப்பட்டினம் மாவட்டத்தில் குடிநீர்...