×

வயநாட்டில் 50 அடி பள்ளத்தில் ஜீப் கவிழ்ந்து 9 பெண்கள் பலி: 3 பேர் படுகாயம்

திருவனந்தபுரம்: வயநாடு மாவட்டம் மானந்தவாடி அருகே தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் சென்ற ஜீப் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 3 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் மானந்தவாடி அருகே உள்ள தலப்புழா பகுதியில் ஏராளமான தேயிலைத் தோட்டங்கள் உள்ளன. இந்தப் பகுதியில் பஸ் போக்குவரத்து அதிகமாக இல்லாததால் பெரும்பாலும் தொழிலாளர்கள் ஜீப்களில் தான் செல்வது வழக்கம். நேற்று மாலை 3.30 மணியளவில் பணி முடிந்த பின்னர் 11 பெண் தொழிலாளர்கள் ஒரு ஜீப்பில் தங்களது வீடுகளுக்கு புறப்பட்டனர்.

ஜீப்பை அப்பகுதியை சேர்ந்த மணி என்பவர் ஓட்டினார். அருகிலுள்ள கண்ணோத்து மலை பகுதி அருகே ஒரு வளைவான பாதையில் வேகமாக திரும்பியபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து 50 அடி பள்ளத்தில் ஜீப் தலைகீழாக கவிழ்ந்தது. இதில் 12 பேரும் ஜீப்பிலிருந்து வெளியே தூக்கி வீசப்பட்டனர். பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஜீப் முற்றிலுமாக உருக்குலைந்தது. மிகவும் செங்குத்தான பள்ளம் என்பதால் போலீசாரும், தீயணைப்பு படையினரும் ஈடுபட்டவர்கள் கயிறு கட்டித் தான் கீழே இறங்க முடிந்தது.

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ராணி, சாந்தா, சின்னம்மா, லீலா, ஷாஜா பாபு, ராபியா, மேரி, வசந்தா மற்றும் ஷோபனா ஆகிய 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். லதா, உமாதேவி மற்றும் ஜீப் டிரைவர் மணி ஆகிய 3 பேர் படுகாயமடைந்தனர். இவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மானந்தவாடியிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆபத்தான நிலையில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

The post வயநாட்டில் 50 அடி பள்ளத்தில் ஜீப் கவிழ்ந்து 9 பெண்கள் பலி: 3 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Jeep ,Wayanam ,Thiruvananthapuram ,Mananthavadi, Wyanad district ,Wayne ,
× RELATED ஜீப் மோதி வாலிபர் பலி