புதுக்கோட்டை: தமிழகத்தில் இந்தாண்டு கூடுதலாக 50 அரசு பள்ளிகள் பசுமை பள்ளிகளாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் அனைத்து அரசு பள்ளிகளிலும், காலை உணவு திட்டம் விரிவாக்கத்தை, முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். கட்சி பேதமின்றி, அனைத்து கட்சி எம்.பி.க்கள், எம்எல்ஏக்களும் இத்திட்டத்தை தொடங்கி வைக்குமாறு முதல்வர் ஏற்கெனவே வேண்டுகோள் விடுத்திருந்தார். அதன்படி, மக்கள் பிரதிநிதிகள் தங்கள் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் இத்திட்டத்தை தொடங்கி வைத்தனர்.
இந்நிலையில், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி முள்ளூர் முதல் நிலை ஊராட்சி அரசு தொடக்கப்பள்ளியில் சுற்றுச்சூழல்துறை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்து மாணவ, மாணவிகளுடன் இணைந்து உணவருந்தினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர், தமிழகத்தில் இந்தாண்டு கூடுதலாக 50 அரசு பள்ளிகள் பசுமை பள்ளிகளாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்கள் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை பயன்படுத்துவது வெகுவாக குறைந்துள்ளது.
மாணவர்களுக்கு விரைவில் உலோகத்தால் ஆன தண்ணீர் பாட்டில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். தமிழகத்தில் 53 இடங்களில் குப்பை கிடங்குகள் பயோமைனிங் மூலம் அகற்றப்பட்டு உயிர் நிலங்களாக மீட்கப்பட்டுள்ளது. காவிரி, தென்பெண்ணை ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க ரூ.1,885 கோடியில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும் என்றும் அமைச்சர் மெய்யநாதன் செய்தியாளர்களிடம் கூறினார்.
The post தமிழகத்தில் இந்தாண்டு கூடுதலாக 50 அரசு பள்ளிகள் பசுமை பள்ளிகளாக மாற்ற நடவடிக்கை: அமைச்சர் மெய்யநாதன் பேட்டி appeared first on Dinakaran.