×

இலங்கை கடற்படை மீண்டும் அட்டகாசம் மீனவர்கள் மீது சரமாரி தாக்குதல்

ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியதில், ராமேஸ்வரம் மீனவர் ஒருவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஏராளமான விசைப்படகுகள் கடலுக்கு நேற்று முன்தினம் மீன்பிடிக்கச் சென்றன. அன்று மாலை மீனவர்கள் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் மீன்பிடிப்பில் ஈடுபட்ட ராமேஸ்வரம் மீனவர்களின் படகுகளை வழிமறித்து விரட்டியடித்தனர். இதனால் மீனவர்கள் வேறு பகுதிக்கு சென்று மீன் பிடித்தனர். இதனிடையே, தங்கச்சிமடம் மீனவர் ஜோசப் படகை வழிமறித்த இலங்கை கடற்படையினர், படகில் இருந்த மீன்களை அள்ளிச் சென்றனர். மேலும் படகில் இருந்த மீனவர்களையும் சரமாரியாக தாக்கினர். இதில், படகில் இருந்த ராமேஸ்வரம் மாந்தோப்பு தெருவைச் சேர்ந்த முனீஸ்வரன் (20) தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இரவு முழுவதும் ஆழம் குறைந்த கடல்பகுதியில் மீன்பிடித்த மீனவர்கள் நேற்று ராமேஸ்வரம் வந்து சேர்ந்தனர். 46 பேர் மீது வழக்கு: நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே ஆற்காட்டுதுறை வெள்ளப்பள்ளம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த போது தொடர்ந்து 2 நாட்களாக அவர்கள் மீது இலங்கை கடல் கொள்ளையர்கள் கத்தி, இரும்பு கம்பியால் தாக்கி வலைகள், மீன்கள், மற்றும் உபகரணங்களை கொள்ளையடித்து கொண்டு விரட்டினர். இந்த தாக்குதலில் மீனவர்கள் 15 பேர் காயமடைந்தனர். இதுதொடர்பாக வேதாரண்யம் கடலோர பாதுகாப்பு குழும போலீசார், அடையாளம் தெரியாத 46 இலங்கை கடல் கொள்ளையர்கள் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

The post இலங்கை கடற்படை மீண்டும் அட்டகாசம் மீனவர்கள் மீது சரமாரி தாக்குதல் appeared first on Dinakaran.

Tags : Sri Lankan Navy ,Atakasam ,Rameswaram ,Rameswaram Fishing Port ,
× RELATED இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த 3 படகு ஓட்டுநர்கள் விடுதலை