×

சென்னை புறநகர் பகுதிகளில் கனமழை; சாலைகளில் தேங்கிய மழைநீர் உடனடி அகற்றம்: தாம்பரம் மாநகராட்சி நடவடிக்கை

தாம்பரம்: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளான தாம்பரம், முடிச்சூர், வண்டலூர், பெருங்களத்தூர், செம்பாக்கம், சிட்லப்பாக்கம், குரோம்பேட்டை, பல்லாவரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் இன்று அதிகாலை வரை கனமழை பெய்தது. இதனால் தாம்பரத்தில் மேற்கு பகுதியில் இருந்து கிழக்குப்பகுதிக்கு செல்லும் சுரங்கப்பாதை முழுவதும் மழைநீர் தேங்கி நின்றது. இதுபோல் பழைய ஜிஎஸ்டி சாலை, குரோம்பேட்டை, பல்லாவரம் ஜிஎஸ்டி சாலை, செம்பாக்கம், திருமலை நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது. இதனால் காலை நேரத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்ற மாணவ, மாணவிகள், வேலைக்கு சென்றவர்கள், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.

இதுபோல் செம்பாக்கம், திருமலைநகர், மகாகணபதி தெரு, மகா சக்தி நகர், மாரியம்மன் கோயில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் சாலைகள் மற்றும் குடியிருப்புகளை சுற்றிலும் மழைநீர் தேங்கி நின்றதால், வீடுகளில் இருந்து வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்ததும் தாம்பரம் மாநகராட்சி ஆணையர் அழகுமீனா, மாநகராட்சி ஊழியர்களை மழைநீர் தேங்கி நின்ற பகுதிகளுக்கு அனுப்பிவைத்து மழைநீரை வெளியேற்ற உடனடி நடவடிக்கை எடுத்தார். அதன்படி தாம்பரத்தில் மேற்கு பகுதியில் இருந்து கிழக்குப்பகுதிக்கு செல்லும் சுரங்கப்பாதையில் ஒரு மணி நேரத்திற்குள் தேங்கி நின்ற மழைநீர் அகற்றப்பட்டு போக்குவரத்து சரிசெய்யப்பட்டது.

பழைய ஜிஎஸ்டி சாலை உட்பட மழைநீர் தேங்கிய அனைத்து பகுதிகளிலும் மாநகராட்சி ஆணையர் அழகுமீனா உத்தரவின்பேரில் மாநகராட்சி ஊழியர்கள் மழைநீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தாம்பரம் மாநகராட்சியின் அதிரடி நடவடிக்கையால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமமின்றி சென்றுவரும் நிலை ஏற்பட்டுள்ளது. மழைநீர் பாதிப்பு குறித்து பொதுமக்கள் மற்றும் சமூக அலுவலர்கள் உடனடியாக தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகளுக்கு தெரிவித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் அழகுமீனா தெரிவித்துள்ளார்.

The post சென்னை புறநகர் பகுதிகளில் கனமழை; சாலைகளில் தேங்கிய மழைநீர் உடனடி அகற்றம்: தாம்பரம் மாநகராட்சி நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tambaram Corporation ,Thambaram ,Kanachur ,Vandalur ,Parangalur ,Chembakkam ,Sitlappakam ,Chrompet ,Pallavaram ,Circular ,Chennai Suburbs ,Dinakaran ,
× RELATED மே 2-ம் தேதி போலீஸ் விசாரணைக்கு ஆஜராகி...