ஜோகன்னஸ்பர்க்: பிரிக்ஸ் கூட்டமைப்பில் 6 புதிய நாடுகள் இணையவுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். அர்ஜெண்டினா, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளை பிரிக்ஸ் அமைப்பில் இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளை உள்ளடக்கிய ‘பிரிக்ஸ்’ 3 நாள் மாநாடு நேற்று முன்தினம் தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் தொடங்கியது. கொரோனா காரணமாக, 3 ஆண்டுகளுக்கு பிறகு நேரடி நிகழ்வாக மாநாடு நடக்கிறது.
தென்னாப்பிரிக்க அதிபர் சிறில் ரமாபோசா அழைப்பின்பேரில், பிரதமர் மோடி சென்றார். பின்னர், ‘பிரிக்ஸ்’ வர்த்தக கூட்டமைப்பு தலைவர்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். இதையடுத்து 3வது மற்றும் கடைசி நாள் ‘பிரிக்ஸ்’ மாநாடு இன்று காலை தொடங்கியது.
இதில் பிரதமர் மோடி பேசுகையில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் 60 முதல் 70 சதவீத வேலைவாய்ப்பை கொண்டுள்ளது. உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 50 சதவீதத்தை பங்களிக்கிறது. அவர்களுக்கு நமது தொடர்ச்சியான ஆதரவு தேவை.
நாங்கள் கொள்கை ஸ்திரத்தன்மையை கொண்டு வந்துள்ளோம். அடுத்த சில ஆண்டுகளில் இந்தியாவை 3வது பெரிய பொருளாதாரமாக மாற்ற உறுதி பூண்டுள்ளோம். தொற்றுநோய் முதல் புவியியல் வரையிலான தற்போதைய உலகளாவிய சவால்கள், அரசியல் பதற்றங்கள் உலக பொருளாதாரத்தை சோதித்துள்ளன. ஜி20ல் சர்வதேச வர்த்தகம் மற்றும் முதலீடுகளில் நம்பிக்கையை வளர்ப்பது நமது பொறுப்பு.
எதிர்கால அதிர்ச்சிகளை தாங்கக்கூடிய மீள் மற்றும் உள்ளடக்கிய உலகளாவிய மதிப்புச் சங்கிலிகளை நாம் உருவாக்க வேண்டும்’ என்றார். பிரிக்ஸ் கூட்டமைப்பில் 6 புதிய நாடுகள் இணையவுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். அர்ஜெண்டினா, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளை பிரிக்ஸ் அமைப்பில் இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
எகிப்து, எத்தியோப்பியா, ஈரான் ஆகிய நாடுகளை கூட்டமைப்பில் இணைக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார். சந்திரயான் 3 வெற்றிக்கு பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற உலக நாட்டு தலைவர்கள் பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
The post பிரிக்ஸ் கூட்டமைப்பில் 6 புதிய நாடுகள் இணையவுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு appeared first on Dinakaran.