சென்னை, ஆக.24: வடபழனி பேருந்து நிலையத்தில் மாநில கல்லூரி மாணவனை தாக்கிய விவகாரத்தில் ைகது செய்யப்பட்ட 7 நந்தனம் கல்லூரி மாணவர்களுக்கு 30 நாட்கள் நல்லொழுக்கப் பயிற்சி வழங்க சைதாப்பேட்டை நீதிமன்றம் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது. சென்னை நந்தம்பாக்கம் அஞ்சுகம் நகரை சேர்ந்தவர் பிரேம்குமார் (19). இவர், மாநில கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வருகிறார். வழக்கம் போல் ேநற்று முன்தினம் காலை வடபழனி பேருந்து நிலையத்தில் மாநகர பேருந்துக்காக (தடம் எண் 25) காத்திருந்தார். அப்போது அங்கு வந்த நந்தனம் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள், ‘நீ எந்த கல்லூரி. இது எங்கள் ரூட், நீ ஏன் இங்க வந்தாய்’ என கேட்டு பிளாஸ்டிக் பைப்பால் சரமாரியாக தாக்கினர். இதில் தலை மற்றும் முகத்தில் காயமடைந்த பிரேம்குமாரை போலீசார் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் பிரேம்குமார் அளித்த புகாரின்படி, பிளாஸ்டிக் பைப்பால் தாக்குதல் நடத்திவிட்டு தப்பி ஓடிய நந்தனம் கல்லூரி மாணவன் தீபா கணேஷ், நண்பர்களான அபினேஷ், சதீஷ், கிரிதரன், நவீன், தமிழ்செல்வன், அரசு என 7 பேரை அதிரடியாக போலீசார் கைது செய்தனர்.
பின்னர் கைது செய்யப்பட்ட நந்தனம் கல்லூரி மாணவர்கள் 7 பேரையும் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் மாலை ஆஜர்படுத்தினர். அப்போது நீதிபதி, மோதலில் ஈடுபட்ட நபர்கள் கல்லூரி மாணவர்கள் என்பதால், சென்னை மாநகர காவல்துறை சார்பில் நடத்தும் பறவை திட்டத்தின் கீழ், சைதாப்பேட்டையில் உள்ள மார்டன் பள்ளியில் 30 நாட்கள் ‘நல்லொழுக்கம் குறித்து மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க போலீசாருக்கு உத்தரவிட்டார். இதைதொடர்ந்து போலீசார் 7 மாணவர்களுக்கும் நேற்று முதல் நல்லொழுக்கப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
The post வடபழனி பேருந்து நிலையத்தில் மாணவனை தாக்கிய விவகாரம் நந்தனம் கல்லூரி மாணவர்கள் 7 பேருக்கு நல்லொழுக்க பயிற்சி: போலீசாருக்கு சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.
