×

கோவை மாநகர எல்லைக்குள் துடியலூர், வடவள்ளி போலீஸ் ஸ்டேஷன்

கோவை, ஆக.24: கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறுகையில்,‘‘ துடியலூர் மற்றும் வடவள்ளி போலீஸ் ஸ்டேஷன் கோவை மாநகர போலீசுடன் இன்று (23ம் தேதி) இணைக்கப்பட்டுள்ளது. எனவே இந்த போலீஸ் ஸ்டேஷன்களில் கூடுதல் போலீசாரை நியமித்து குற்ற தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். போக்குவரத்தை சீரமைக்க இந்த இணைப்பு உதவியாக இருக்கும். குற்றவாளிகள் மாநகரில் ஒரு இடத்தில் குற்றம் செய்து விட்டு வேறு இடத்திற்கு தப்பி செல்லும் சூழல் இருந்து வந்தது. தற்போது இந்த இரு போலீஸ் ஸ்டேஷன்கள் மாநகர போலீசில் இணைக்கப்பட்ட தால் அது போன்ற சுழல் இருக்காது. இந்த போலீஸ் ஸ்டேஷன்களில் சட்டம் ஒழுங்கு, குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்படும்.

துடியலூர் பகுதியில் பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பாக பதிவான புகார்கள் மத்திய பகுதி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனிலும், வடவள்ளி பகுதி பெண்கள், குழந்தைகள் தொடர்பான புகார்கள் மேற்கு பகுதி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனிலும் பதிவு செய்யப்படும். புதிதாக நகரில் இணைக்கப்பட்ட பகுதியில் கல்லூரிகள் அதிகம் இருப்பதால் போதை பொருள் நடமாட்டத்தை தடுக்க கூடுதல் நடவடிக்கை எடுக்கப்படும். நகரில் தற்போது 20 போலீஸ் ஸ்டேஷனாக எண்ணிக்கை உயர்ந்துள்ளது. கோவை நகர போலீஸ் எல்லைகள் தொடர்பான புதிய வரைபடம் இன்னும் ஒருவாரத்துக்குள் தயாரிக்கப்படும்.

கவுண்டம்பாளையம் ஸ்டேஷன் சி5, சுந்தராபுரம் டி5, கரும்புக்கடை டி6 என்ற பெயரில் அழைக்கப்படும். நகரில் தனியார் பார்கள் கூடுதல் நேரத்தில் செயல்பட்டால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும், ’’ என்றார். கோவை மாவட்ட போலீஸ் எஸ்.பி பத்ரி நாராயணன் கூறுகையில், ‘‘ சூலூர் போலீஸ் ஸ்டேஷன் இரண்டாக பிரிக்கப்பட்டு நீலாம்பூரில் புதிய போலீஸ் ஸ்டேஷன் அமைக்க அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. துடியலூர் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் இனி பெரியநாயக்கன்பாளையம் மகளிர் போலீஸ் ஸ்டேஷனாக செயல்படும். மாவட்டம் முழுவதும் குற்றங்களை தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது, ’’ என்றார்.

The post கோவை மாநகர எல்லைக்குள் துடியலூர், வடவள்ளி போலீஸ் ஸ்டேஷன் appeared first on Dinakaran.

Tags : Dudyalur ,Vadavalli ,Station ,Govai ,Balakrishnan ,Govai Provinity Police ,Commissioner ,Duddalur ,Vadavalli Police Station ,Police Station ,Goa ,
× RELATED கோவை வடவள்ளி அருகே சட்டவிரோதமாக யானை தந்தம் விற்க முயன்ற 4 பேர் கைது!