×

22 மணி நேர சோதனையை தொடர்ந்து மாஜி அமைச்சரின் ரூ40 லட்சம் நிரந்தர வைப்பு தொகை, 2 வங்கி கணக்கு முடக்கம்: ஆவணம் இல்லாமல் பினாமிகளுக்கு கடன் கொடுத்த பத்திரங்கள் பறிமுதல்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள கருவன்னுரில் கூட்டுறவு வங்கி உள்ளது. இந்த வங்கி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கட்டுப்பாட்டில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இங்கு சுமார் ரூ300 கோடிக்கும் மேல் முறைகேடுகள் நடந்ததாக கடந்த வருடம் புகார் எழுந்தது. கடந்த ஆண்டு பினராயி விஜயன் அமைச்சரவையில் அமைச்சராக இருந்த மொய்தீனின் உறவினர்களுக்கு இதில் தொடர்பு இருப்பதாக தகவல்கள் பரவின. இது குறித்து அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் திருச்சூர் வடக்காஞ்சேரியில் தற்போது மார்க்சிஸ்ட் எம்எல்ஏ.வாக உள்ள மொய்தீனின் வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர்.

நேற்று முன்தினம் காலை சுமார் 7 மணிக்குத் தொடங்கிய சோதனை நேற்று அதிகாலை சுமார் 5 மணிக்கு பிறகு தான் முடிவடைந்தது. சுமார் 22 மணிநேரம் நடந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. மொய்தீனிடமும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மொய்தீன் முதல்வர் பினராயி விஜயனுக்கு மிகவும் நெருக்கமானவர். அவரது வீட்டில் சோதனை நடந்தது கேரள அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. மொய்தீனின் பினாமிகள் பலருக்கு போதிய ஆவணங்கள் எதுவும் இல்லாமல் பல கோடி ரூபாய் கடன் கொடுத்தது தொடர்பான பத்திரங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன.

மேலும் கூட்டுறவு வங்கியில் நிரந்தர வைப்புக் கணக்கில் வைத்திருந்த ரூ40 லட்சம் பணத்திற்கு போதிய ஆவணங்களை மொய்தீனால் காண்பிக்க முடியவில்லையாம். ஆகவே அதை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது. மேலும் அவரது 2 வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன. இதையடுத்து மொய்தீனிடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் இது தொடர்பாக அமலாக்கத்துறை நோட்டீஸ் கொடுக்க தீர்மானித்துள்ளது.

The post 22 மணி நேர சோதனையை தொடர்ந்து மாஜி அமைச்சரின் ரூ40 லட்சம் நிரந்தர வைப்பு தொகை, 2 வங்கி கணக்கு முடக்கம்: ஆவணம் இல்லாமல் பினாமிகளுக்கு கடன் கொடுத்த பத்திரங்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Ex ,benami ,Thiruvananthapuram ,Karuanur ,Thrissur, Kerala ,Marxist Communist Party… ,Dinakaran ,
× RELATED சொல்லிட்டாங்க…