புதுடெல்லி: ஒன்றிய கல்வி அமைச்சகத்தின் புதிய பாடத்திட்ட கட்டமைப்பின்படி, இனி 11, 12ம் வகுப்புகளுக்கு ஆண்டுக்கு 2 பொதுத்தேர்வு நடத்தப்படும் எனவும், அதில் எந்த தேர்வில் அதிக மதிப்பெண்ணோ அதையே மாணவர்கள் தேர்வு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு கடந்த 2020ம் ஆண்டு புதிய தேசிய கல்விக் கொள்கையை வெளியிட்டது. இது ஒன்றிய அரசால் நடத்தப்படும் கல்வி நிறுவனங்களில் படிப்படியாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள புதிய பாடத்திட்டங்கள் அடுத்தாண்டு அமலுக்கு வர உள்ளது. இந்நிலையில், புதிய பாடத்திட்ட கட்டமைப்பில் இறுதி செய்யப்பட்டுள்ள சில தகவல்கள் நேற்று வெளியாகின.
* 11, 12ம் வகுப்புக்கு ஆண்டுக்கு 2 பொதுத்தேர்வு நடத்தப்படும். அதில் எந்த தேர்தவில் அதிக மதிப்பெண் கிடைக்கிறதோ அதையே மாணவர்கள் தேர்வு செய்து கொள்ள அனுமதிக்கப்படும்.
* 11, 12ம் வகுப்பு மாணவர்கள் ஒரு மொழிப் பாடத்திற்கு பதிலாக 2 மொழிப் பாடங்களை பயில வேண்டும். அதில் ஒரு மொழி கட்டாயம் இந்திய மொழியாக இருக்க வேண்டும்.
* பொதுத் தேர்வுகள் தற்போது நடைமுறையில் உள்ளதைப் போல பல மாதங்கள் பயிற்சி செய்து, மனப்பாடம் செய்வது போல் இல்லாமல் மாணவர்களின் திறன் மற்றும் புரிதல் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்படும்.
* எந்த பாடத்தில் மாணவர்கள் தயாராக இருக்கிறார்களோ அந்த பாடத்திற்கு மட்டும் பொதுத் தேர்வெழுதலாம். இது மாணவர்கள் சிறப்பாக செயல்படுவதற்கு போதுமான நேரத்தையும் வாய்ப்பையும் உறுதி செய்யும்.
* 11, 12ம் வகுப்பில் மாணவர்கள் வழக்கமான கலை, அறிவியல், வணிகத்தை தாண்டி பிற பாடங்களையும் தேர்வு செய்யும் வாய்ப்புகள் வழங்கப்படும்.
* பாடப்புத்தகங்களின் விலை அனைவருக்கும் உகந்ததாக இருக்க வேண்டும். இவ்வாறு புதிய பாடத்திட்ட கட்டமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
The post புதிய பாடத்திட்டத்தின்படி இனி 11, 12ம் வகுப்புகளுக்கு ஆண்டுக்கு 2 பொதுத்தேர்வு: ஒன்றிய அரசு அதிரடி அறிவிப்பு appeared first on Dinakaran.