×

வேதாரண்யம் மீனவர்கள் மீது மீண்டும் தாக்குதல்: ரூ.1 லட்சம் உபகரணங்களை பறித்து விரட்டியடித்த கடல் கொள்ளையர்கள்

வேதாரண்யம்: வேதாரண்யம் மீனவர்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் மீண்டும் தாக்கி விரட்டியடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆறுக்காட்டுத்துறையில் இருந்து 5 விசைப்படகு, ஒரு பைபர் படகில் சென்று 22 மீனவர்கள் நேற்று அதிகாலை கோடியக்கரைக்கு தென்கிழக்கே நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது 7 பைபர் படகுகளில் வந்த 15 கடற்கொள்ளையர்கள் ஆறுகாட்டுத்துறை மீனவர்களை தாக்கி அவர்களிடமிருந்து, ரூ.10 லட்சம் மதிப்பிலான வலை, வாக்கி டாக்கி, செல்போன், திசைகாட்டும் கருவி, பேட்டரி, டார்ச்லைட், மீனவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களை பறித்து சென்றனர். இதில் காயமடைந்த 8 மீனவர்கள் நாகை, வேதாரண்யம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து கடலோர காவல் குழும போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தை கண்டித்து ஆறுகாட்டுத்துறை மீனவர்கள் நேற்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் வேதாரண்யம் மீனவர்களை மீண்டும் கடற்கொள்ளையர்கள் தாக்கிய சம்பவம் நடந்துள்ளது.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த வெள்ளப்பள்ளத்தை சேர்ந்த வைத்தியநாதசுவாமி (45) என்பவருக்கு ெசாந்தமான பைபர் படகில் அவரும், ராமராஜன் (32), செல்வராஜ் (50) ஆகியோரும் ஆழ்கடலில் மீன் பிடிக்க நேற்று முன்தினம் புறப்பட்டு சென்றனர். நேற்றிரவு கோடியக்கரைக்கு தென்கிழக்கே நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது ஒரு பைபர் படகில் 3 கடற்கொள்ளையர்கள் வந்தனர். அங்கு மீன் பிடித்து கொண்டிருந்த 3 மீனவர்களையும் கைகளால் சரமாரியாக தாக்கினர். பின்னர் படகில் இருந்த மீன்பிடி வலை, திசைகாட்டும் கருவி, வாக்கி டாக்கி, செல்போன், 20 லிட்டர் டீசல் மற்றும் மீன்கள் என ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்களை பறித்து கொண்டு 3 பேரையும் விரட்டியடித்தனர். அந்த 3 மீனவர்களும் இன்று அதிகாலை வேதாரண்யத்துக்கு வந்து சக மீனவர்களிடம் நடந்த சம்பவத்தை கூறினர். மேலும் வேதாரண்யம் கடலோர குழும போலீசில் புகார் செய்தனர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அடுத்தடுத்து கடற்கொள்ளையர்களால் மீனவர்கள் தாக்கப்படும் சம்பவம் வேதாரண்யம் பகுதி மீனவ கிராமங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post வேதாரண்யம் மீனவர்கள் மீது மீண்டும் தாக்குதல்: ரூ.1 லட்சம் உபகரணங்களை பறித்து விரட்டியடித்த கடல் கொள்ளையர்கள் appeared first on Dinakaran.

Tags : Vedaranyam ,Nagai district… ,Dinakaran ,
× RELATED எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை மீனவர்கள் 14 பேர் கைது!