×

இந்தி பேசாத மாநில மாணவர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி: இந்தி மொழித் தேர்வு கட்டாயம் என்ற அறிவிப்புக்கு சு.வெங்கடேசன் எம்.பி. கண்டனம்

சென்னை: தமிழ்நாடு உள்ளிட்ட இந்தி பேசாத மாநில மாணவர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள மாபெரும் அநீதி என்று மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; என்ஐடி உள்ளிட்ட ஒன்றிய அரசின் கல்வி நிறுவனங்களில் ஆசிரியரல்லாத அலுவலர் நியமன தேர்வுகளில் இந்தி மொழித் தேர்யவை கட்டாயம் ஆக்குகிற அறிக்கையை தேசிய தேர்வு முகமை கடந்த 17-ம் தேதி அன்று வெளியிட்டுள்ளது. ராய்ப்பூர், ஜாம்ஷெட்பூர், கோழிக்கோடு, சூரத்கல், ராஞ்சி, ஹமிர்பூர், சில்சார், குருச்சேத்திரா ஆகிய என்.ஐ.டி. கள், ஜெய்ப்பூரில் உள்ள எம்.என்.ஐ.டி. ஆகிய நிறுவனங்களில் உள்ள பல்வேறு பதவிகளுக்கான ஆசிரியரல்லாத அலுவலர் பணி நியமனங்கள் நிரப்படுவதற்கான அறிவிக்கை அது.

அதில் இந்தி மொழித் தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. 20 சதவீதம் மற்றும் 30 சதவீதம் மதிப்பெண்கள் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழித் தேர்வுகளுக்கு தரப்பட்டுள்ளது. ஆங்கிலம், இந்தி என மதிப்பெண் விவரம் பிரித்து தரப்படவில்லை. இது தமிழ்நாடு உள்ளிட்ட இந்தி பேசாத மாநிலங்களை சேர்ந்த தேர்வர்களுக்கு இழைக்கப்படும் அநீதி ஆகும். இது, மேலும் இந்தி பேசும் மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் வாய்ப்புகளை அதிகரித்து இந்தி பேசாத மாணவர்களின் வாய்ப்புகளை கடுமையாக பாதிக்கக் கூடியதாகும். மேலும் இந்தியாவின் மொழிப் பன்மைத்துவத்திற்கு எதிரானது.

அலுவல் மொழி விதிகள் 1974, மாநிலங்களை 3 பகுதிகளாக பிரித்து இருப்பதும், தமிழ்நாட்டிற்கு ஒட்டு மொத்தமாக விதிவிலக்கு தந்திருப்பதும் கூட தேசிய தேர்வு முகமையால் புறம் தள்ளப்படுவது ஏற்கத்தக்கதல்ல. வன்மையான கண்டனத்திற்குரியது. உடனடியாக தலையிட்டு தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ள தேர்வு பாட முறையை மாற்றி அமைக்குமாறு ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளேன். இவ்வாறு தெரிவித்தார்.

The post இந்தி பேசாத மாநில மாணவர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி: இந்தி மொழித் தேர்வு கட்டாயம் என்ற அறிவிப்புக்கு சு.வெங்கடேசன் எம்.பி. கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Su.Venkatesan ,CHENNAI ,Madurai ,Tamil Nadu ,Su. Venkatesan ,
× RELATED மதுரை காமராஜர் பல்கலை. துணைவேந்தர் ராஜினாமா ஏற்பு