பூதப்பாண்டி, ஆக.23: பூதப்பாண்டியில் திருமண நிகழ்ச்சியில் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து ரோட்டில் நின்று கொண்டிருந்த பெயின்டரை, விவசாயி சரமாரியாக வெட்டி கொலை செய்தார். கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே நாவல்காடு நம்பியான்குளம் பகுதியை சேர்ந்தவர் ராபர்ட் என்ற நெல்சன் (49). பெயின்டர். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர். அதே பகுதியை சேர்ந்தவர் ரிச்சர்டு (43). விவசாயி. இவரது நெருங்கிய உறவினர் ஒருவரின் வீடு ராபர்ட் வீட்டின் அருகே உள்ளது. அந்த நபருக்கும், ராபர்ட்டுக்கும் இடம் சம்பந்தமாக ஏற்கனவே பிரச்னை உள்ளது. இதுதொடர்பாக காவல் நிலையத்திலும் இருதரப்பில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
இதனால் ராபர்ட் மீது ரிச்சர்டுவுக்கு முன்விரோதம் இருந்து உள்ளது. 2 பேரும் அடிக்கடி வாய்த்தகராறில் ஈடுபட்டு வந்து உள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் அதே பகுதியில் உள்ள மண்டபத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இதில் பங்கேற்பதற்காக இரவு சுமார் 8 மணி அளவில் ராபர்ட் சென்றார். அப்போது அங்கு ஏற்கனவே ரிச்சர்டும் வந்து இருந்தார். அப்போது 2 பேரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளனர். இருவரும் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. ராபர்ட் சுமார் 9.45 மணி அளவில் மண்டபத்தில் இருந்து வெளியே சென்றார். ஆனால் வீட்டுக்கு செல்லாமல் நாவல்காட்டில் உள்ள ஒரு சர்ச் அருகே சாலையோரத்தில் நின்று கொண்டிருந்தார்.
இதற்கிடையே திருமண மண்டப சமையல் அறையில் வாழை இலைகளை அறுப்பதற்காக வைத்திருந்த அரிவாளை எடுத்துக்கொண்டு வெளிய வந்த ரிச்சர்டு சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த ராபர்ட்டிடம் மீண்டும் தகராறில் ஈடுபட்டார். இதனால் 2 பேருக்கும் இடையே மீண்டும் கடும் மோதல் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ரிச்சர்டு அரிவாளால் ராபர்ட்டை சரமாரியாக வெட்டினார். உடலில் பல இடங்களில் வெட்டுக்காயம் ஏற்பட்டதால் ராபர்ட் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். சிறிது நேரத்தில் அந்த இடத்திலேயே ராபர்ட் பரிதாபமாக இறந்தார். அவர் இறந்து விட்டதை உறுதி செய்த ரிச்சர்டு, அங்கிருந்து நேராக பூதப்பாண்டி காவல் நிலையத்துக்கு சென்று சரணடைந்தார்.
போலீசார் விசாரணை நடத்தி ரிச்சர்டை கைது செய்தனர். ராபர்ட்டின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ராபர்ட்டை கொலை செய்த ரிச்சர்டுக்கும் திருமணமாகி மனைவி மற்றும் ஒருமகனும் ஒரு மகளும் உள்ளனர். நடுரோட்டில் பெயின்டரை, விவசாயி வெட்டி கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
துண்டான கை
ஆத்திரத்தில் இருந்த ரிச்சர்டு முதலில் ராபர்ட்டின் இடது கையில் அரிவாளால் வெட்டி இருக்கிறார். இதில் அவரது மணிக்கட்டு பகுதி துண்டாகி விழுந்தது. அதே கையில் மீண்டும் வெட்டினார். இதனால் கையின் மற்றொரு பகுதியும் துண்டாகி விழுந்தது. அவரிடம் இருந்து தப்பிக்க ராபர்ட் கடுமையாக போராடி இருக்கிறார். இதனால் அவரது வயிறு, கால்கள் என்று பல இடங்களிலும் அரிவாள் வெட்டு விழுந்தது. அங்கிருந்து ராபர்ட் தப்பித்துஓட முயன்றார். இதனால் மேலும் ஆத்திரமடைந்த ரிச்சர்டு அரிவாளால் ராபர்ட்டின் தலையில் ஓங்கி வெட்டினார். இதில் அவரது மூளை சிதறி கீழே விழுந்தது.
The post பூதப்பாண்டியில் திருமண நிகழ்ச்சியில் மோதல்; நடுரோட்டில் பெயின்டர் சரமாரி வெட்டி கொலை: காவல்நிலையத்தில் விவசாயி சரண் appeared first on Dinakaran.