×

மருமகள் கொடுத்த புகாரின்பேரில் மேட்டூர் பாமக எம்எல்ஏ மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு: நேரில் வரவழைத்து போலீசார் விசாரணை

சேலம்: மருமகள் கொடுத்த புகாரின்பேரில் மேட்டூர் பாமக எம்எல்ஏ சதாசிவம், அவரது மகன் உள்பட 4 பேர் மீது வரதட்சணை கொடுமை உள்பட 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் மாவட்டம் மேட்டூர் தொகுதி பாமக எம்எல்ஏ சதாசிவம். இவரது மகன் சங்கருக்கும் சேலம் சர்க்கார் கொல்லப்பட்டியை சேர்ந்த மனோலியா(24)வுக்கும் 2019ல் திருமணம் நடந்தது. ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனோலியா பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்நிலையில் சென்னை குற்றப்பிரிவு மற்றும் பெண்கள் குழந்தைகள் பிரிவுக்கு மனோலியா புகார் கடிதம் ஒன்றை அனுப்பினார்.

அது சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து சூரமங்கலம் மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். புகாரில், கணவர் சங்கர், மாமனார் சதாசிவம், மாமியார், நாத்தனார் ஆகியோர் செய்த கொடுமைகளை தாங்க முடியவில்லை. கணவர், என்னை ஆபாசமாக புகைப்படம் எடுத்து மிரட்டி வருகிறார். இதனால் எனது பெற்றோர் வீட்டிற்கு வந்துவிட்டேன். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார். இதையடுத்து எம்எல்ஏ சதாசிவம், மகன் சங்கர், மனைவி பேபி, மகள் கலைவாணி ஆகியோர் மீது வரதட்சணை கொடுமை, ஆபாசமாக பேசுவது, துன்புறுத்துதல், கொலை மிரட்டல், பெண் வன்கொடுமை உள்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக விசாரணைக்கு வருமாறு இன்ஸ்பெக்டர் சசிகலா எம்எல்ஏவை அழைத்தார். இதையடுத்து நேற்று பகல் 1 மணியளவில் சதாசிவம் எம்எல்ஏ போலீஸ் ஸ்டேசனுக்கு வந்தார். அவருக்கு ‘‘எப்போது அழைத்தாலும் விசாரணைக்கு வரவேண்டும்’’ என கூறி சம்மனை வழங்கினர். அவரது மனைவி பேபிக்கு நேரில் சென்று சம்மன் கொடுக்கப்பட்டது. மகளும், மகனும் சென்னையில் இருப்பதால் அவர்கள் நேரில் வந்து சம்மனை பெற்றுக்கொள்வார்கள் என தெரிவித்தார்.

புகாருக்கு ஆளான அனைவரையும் ஒன்றாக வைத்து விசாரிக்க போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதுகுறித்து பாமக எம்எல்ஏ சதாசிவம் கூறுகையில், சிலரது தூண்டுதலால் பொய்யான தகவல்களை எல்லாம் தெரிவித்து, எனது நற்பெயருக்கு களங்கம் கற்பிக்கும் நோக்கத்தில் புகார் கொடுத்திருக்கிறார்கள். நானும், எனது குடும்பத்தாரும் தலைமறைவாகவில்லை. போலீசாரின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பேன்’’ என்றார்.

The post மருமகள் கொடுத்த புகாரின்பேரில் மேட்டூர் பாமக எம்எல்ஏ மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு: நேரில் வரவழைத்து போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Mettur Bamaka ,Salem ,Mettur Bhamaka ,Sathasivam ,
× RELATED சேலத்தில் கொலையானவர் அடையாளம்...