×

காரில் விநாயகர் சிலை கடத்தல் 4 பேர் கைது; பரபரப்பு தகவல்கள்

திருப்பத்தூர்: ஆலங்காயம் அருகே விநாயகர் சிலையை கடத்திய 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் வந்த காரையும் பறிமுதல் செய்தனர்.திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அடுத்த தீர்த்தம் கிராமத்தில் முருகர் கோயில் உள்ளது. இக்கோயில் அருகே ஆலங்காயம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். நள்ளிரவு 12 மணியளவில் அவ்வழியாக ஒரு கார் வந்தது. சந்தேகமடைந்த போலீசார், அந்த காரை நிறுத்தி சோதனையிட்டனர்.

காரில் வந்த 4 பேரிடம் விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசினர். இதனால் போலீசார், காரை சோதனையிட்டனர். இதில் விநாயகர் சிலை இருந்தது. சந்தேகம் அடைந்த போலீசார், அவர்கள் 4 பேரிடம் தீவிரமாக விசாரணை நடத்தினர். அவர்கள் வேலூரை சேர்ந்த ஏழுமலை (30), சுரேஷ்(32), பிரகாசம்(50), செல்வம்(32) ஆகியோர் என்பதும் இவர்கள் விநாயகர் சிலையை கடத்தியதும் தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 4பேரையும் கைது செய்தனர். பின்னர் சிலை மற்றும் காரை பறிமுதல் செய்தனர். விசாரணையில் அணைக்கட்டு அருகே உள்ள மருதவள்ளிபாளையத்தில் கடந்த 18ம்தேதி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நடந்துள்ளது. அப்போது கோயிலில் கல்லால் ஆன விநாயகர் சிலையை வைத்துள்ளனர். ஆனால் ஊரில் உள்ள ஒருசிலர், விநாயகர் சிலையை திருடிக்கொண்டு வந்து கோயிலில் வைத்தால் ஊருக்கு நல்லது என்று பேசிக்கொண்டதாகவும், இதனால் ஆலங்காயம் தீர்த்தம் பகுதியில் உள்ள முருகர் கோயிலில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலையை திருடி சென்றதாகவும் தெரிவித்துள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

The post காரில் விநாயகர் சிலை கடத்தல் 4 பேர் கைது; பரபரப்பு தகவல்கள் appeared first on Dinakaran.

Tags : Vijayagar ,Thirupathur ,Vineyagar ,Alangayam ,
× RELATED திருப்பத்தூரில் காலாவதியான குளிர்பானங்கள் விற்ற கடைகளுக்கு அபராதம்