×

பொன்னேரி அருகே கோளூர் ஏரியில் மண் குவாரிக்கு அனுமதி அளித்ததை கண்டித்து மக்கள் போராட்டம்.

பொன்னேரி: பொன்னேரி அடுத்த கோளூர் கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் வசித்து வருகின்றனர். இங்குள்ள ஏரியை நம்பி சுமார் 1000க்கும் மேற்பட்ட ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. அண்மையில் மாவட்ட நிர்வாகம், கோளூர் ஏரியில் சவுடு மண் குவாரிக்கு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கு அப்பகுதி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் நேற்று மண் அள்ளும் இயந்திரத்தின் உதவியுடன் குவாரி செயல்படுவதற்கான ஏற்பாடுகள் நடந்தது.

தகவலறிந்து விவசாயிகள், கிராம மக்கள் ஏரிக்கு சென்று மண் அள்ளும் இயந்திரத்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, ‘பாசன வசதிக்கு பயன் பெறக்கூடிய ஏரியை மண் குவாரிக்கு அனுமதித்தால் விவசாயம் முற்றிலும் அழிந்து விடும். ஏற்கனவே தங்களது கிராமத்தில் குடிநீர் சரியில்லாமல் 5 கிமீ தூரத்தில் இருந்து விநியோகம் செய்யப்படுகிறது. தற்போது குவாரியால் விவசாயமும் கேள்விக்குறியாகும் அபாயம் உள்ளது’ என்று குற்றம்சாட்டினர். மேலும் ஏரியில் ஆக்கிரமிப்புகள் உள்ளதாகவும் அதனை வருவாய் துறையினர் மீட்க வேண்டும் எனவும் கேட்டு கொண்டனர். இதனிடையே ஒரு தரப்பினர் குவாரி நடத்தி ஏரியை தூர்வாரி மழைக்காலத்தில் மழைநீர் சேகரிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

இந்நிலையில் பொன்னேரி தாசில்தார் செல்வகுமார், இன்ஸ்பெக்டர் வடிவேல் முருகன் ஆகியோர் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். 50க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையின் முடிவில் அரசு அனுமதி பெற்று மணல் எடுக்கும் பணி தொடங்கியது. இதனால் சுமார் 5 மணி நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

The post பொன்னேரி அருகே கோளூர் ஏரியில் மண் குவாரிக்கு அனுமதி அளித்ததை கண்டித்து மக்கள் போராட்டம். appeared first on Dinakaran.

Tags : Kollur lake ,Ponneri ,Kollur ,Dinakaran ,
× RELATED திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த...