×

நாகை அருகே நடுக்கடலில் நள்ளிரவில் பயங்கரம் மீனவர்கள் மீது கத்தி, கம்பியால் சரமாரி தாக்குதல்: 8 பேர் படுகாயம்: ரூ.10 லட்சம் மீன்பிடி உபகரணங்கள் கொள்ளை: கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்

வேதாரண்யம்: நாகை அருகே நேற்று நள்ளிரவு நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த 24 மீனவர்களை கத்தி, கம்பி, கட்டையால் கடற்கொள்ளையர்கள் தாக்கி ரூ.10 லட்சம் மதிப்புள்ள மீன்பிடி உபகரணங்களை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆறுக்காட்டுத்துறையில் இருந்து 50க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 100க்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று காலை கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

இதில் ஆறுகாட்டுத்துறை பாஸ்கர்(60) என்பவரின் விசைப்படகில் அவரும், அருள்ராஜ்(40), தினேஷ்(15), செல்வமணி(48) ஆகியோரும், சிவபாலன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் வெற்றிவேல்(50), முருகன்(50), வேலவன்(49), தமிழழகன்(55) ஆகியோர் சென்றனர். இதேபோல் பழனிசாமியின்(50) விசைப்படகில் அவரும், சுப்பிரமணியன்(50) ெநடுஞ்செழியன்(38), சுகன்(32) ஆகியோரும், தமிழ்ச்செல்வனின் விசைப்படகில் ஆண்டவர்(40), சுரேஷ்(28), செந்தில்(35) ஆகியோரும் வெள்ளப்பள்ளத்தை சேர்ந்த முத்துச்செல்வனின் விசைப்படகில் அருள் வேலன்(30) மணியரசன்(27), பாலா(25), கலைச்செல்வன்(23) ஆகியோர் சென்றனர்.

மேலும் ஆறுக்காட்டுத்துறையை சேர்ந்த பைபர் படகில் செந்தில் அரசன்(35), வினோத்(33), மருது(24) ஆகியோர் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். ஆறுக்காட்டுத்துறையில் இருந்து கடலில் 22 நாட்டிக்கல் மைல் தொலைவில் நடுக்கடலில் 50 படகுகளில் மீனவர்கள் அருகருகே மீன் பிடித்து கொண்டிருந்தனர். நள்ளிரவு 12 மணியளவில் அந்த பகுதிக்கு 5 பைபர் படகுகளில் 15க்கும் மேற்பட்ட இலங்கை கடற்கொள்ளையர்கள் 5 விசைப்படகு மற்றும் ஒரு பைபர் படகுகளில் மீன் பிடித்து கொண்டிருந்த மீனவர்களை கத்தியை காட்டி மிரட்டினர். பின்னர் அந்த படகுகளில் கடற்கொள்ளையர்கள் ஏறி கத்தி, இரும்பு கம்பி, கட்டை உள்ளிட்ட ஆயுதங்களால் மீனவர்களை சரமாரியாக தாக்கினர். மேலும் மீனவர்கள் மீது தூண்டில் முள்ளை போட்டு இழுத்து காயப்படுத்தினர்.

மேலும், மீனவர்களை சரமாரியாக தாக்கி விட்டு 6 படகுகளில் இருந்த வலைகள், பிடித்து வைத்திருந்த மீன்கள், வாக்கி டாக்கி, திசைகாட்டும் கருவி, பேட்டரி, டார்ச்லைட், செல்போன் மற்றும் ஒரு மீனவர் அணிந்திருந்த வெள்ளி அரைஞாண்கயிறு ஆகியவற்றை பறித்தனர். பின்னர் மீனவர்களை அங்கிருந்து விரட்டியடித்து விட்டு 5 பைபர் படகுகளில் கடற்கொள்ளையர்கள் தப்பி சென்றனர். ரூ.10 லட்சம் மதிப்பிலான மீன்பிடி உபகரணங்கள், மீன்களை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். மீனவர்கள் தாக்கியதில் பாஸ்கர், அருள்ராஜ், அருள்வேலவன், சுப்பிரமணி, வெற்றிவேல், செந்தில், மருது, வினோத் ஆகிய 8 மீனவர்கள் காயமடைந்தனர். இதுகுறித்து மீனவர்கள் வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார், மீனவ பஞ்சாயத்தாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து காயமடைந்த மீனவர்களை அழைத்து கொண்டு 6 படகுகளில் மீனவர்கள் இன்று அதிகாலை ஆறுக்காட்டுத்துறைக்கு வந்தனர். பின்னர் காயமடைந்த 8 மீனவர்களும் ஆம்புலன்ஸ் மூலம் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் பாஸ்கர் அருள்ராஜ், அருள்வேலவன் ஆகியோர் மேல்சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தகவலறிந்து ஆறுக்காட்டுத்துறைக்கு வந்த வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் மீனவர்களிடம் விசாரித்தனர். மேலும் வழக்குப்பதிந்து மீனவர்களை தாக்கிய கடற்கொள்ளையர்கள் யார், இலங்கையை சேர்ந்தவர்களா, நமது கடல் எல்லைக்குள் எப்படி ஊடுருவினார்கள் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். மேலும் கடலிலும் கடற்கொள்ளையர்களை தேடும் பணியில் கடலோர காவல் குழும போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

The post நாகை அருகே நடுக்கடலில் நள்ளிரவில் பயங்கரம் மீனவர்கள் மீது கத்தி, கம்பியால் சரமாரி தாக்குதல்: 8 பேர் படுகாயம்: ரூ.10 லட்சம் மீன்பிடி உபகரணங்கள் கொள்ளை: கடற்கொள்ளையர்கள் அட்டூழியம் appeared first on Dinakaran.

Tags : Nagai ,Volley ,Dinakaran ,
× RELATED நாகையில் குடிநீர் வழங்காததைக்...