×

தோவாளை சானலில் உடைப்பை சீரமைக்கும் பணி தீவிரம்

*பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை

பூதப்பாண்டி : பேச்சிப்பாறை அணையில் இருந்து விவசாயத்திற்காக தோவாளை சானல், அனந்தனார் சானல் போன்ற பல்வேறு சானல்கள் மூலம் தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதில் தோவாளை சானல் தண்ணீரை பயன்படுத்தி 2500 ஏக்கர் வரை நெல் விவசாயம் நடந்து வருகிறது. இந்தநிலையில் அணைகளில் நீர் இருப்பு குறைந்து வருவதால் சுழற்சி முறையில் தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதன் காரணமாக 4 நாட்களாக தோவாளை சானலுக்கு தண்ணீர் விடவில்லை. நேற்று முன்தினம் தண்ணீர் திறக்கப்பட்டது. அப்போது தோவாளை சானலில் இருந்து 15வது கிமீ தூரத்தில் உலக்கை அருவி பகுதியில் திடீரென உடைப்பு ஏற்பட்டது.

இந்த உடைப்பு ஏற்பட்ட பகுதியில் சுமார் 40 மீட்டர் தூரத்துக்கு பக்கச்சுவர் உடைந்து தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது. தகவல் அறிந்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். இந்த உடைப்பு 3 நாட்களுக்குள் சரிசெய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்தநிலையில், நேற்று காலையும் உடைப்பு ஏற்பட்ட பகுதிக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் சென்று பார்வையிட்டனர். பின்னர் அவசர பணியாக டெம்போக்கள் மூலம் மணல் கொண்டு வந்து அந்த பகுதியில் நிரப்பினர். தொடர்ந்து சிமெண்ட் சாக்குகளில் மண் நிரப்பி மூட்டையாக்கி, உடைப்பு ஏற்பட்ட இடத்தில் இருந்து 40 மீட்டர் தூரத்துக்கு அடுக்கும் பணி நடக்கிறது.

விவசாய தேவைக்காக உடனடியாக நாளை தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து மணல் மூட்டை அடுக்கிய இடத்தில் கான்கீரிட் தடுப்பு சுவர் எழுப்பப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.இது குறித்து விவசாயிகள் தரப்பில் கூறும்போது: ஏற்கனவே கன்னிப்பூ பயிரிடப்பட்டதில் இருந்து மழை இல்லை. நெல் பயிருக்கு சுழற்சி முறையில் தண்ணீர் வருவதால் வயல்களில் தண்ணீர் நிறுத்த முடியவில்லை. ஆகையால் விவசாயிகளுக்கு முழு மகசூல் கிடைக்காது. அதானால் வறட்சி பகுதியாக எங்கள் பகுதியை அறிவிக்க வேண்டும்.

முன்னதாக பொதுப்பணித்துறையில் இருந்து 385 வாட்சர்கள் இருந்தார்கள். தற்சமயம் 80 பணியாளர்கள் தான் இருக்கிறார்கள். ஆரம்பத்தில் இருந்ததை போலவே 385 வாட்சர்களும் இருந்தார்கள் என்றால் எந்த பிரச்னையும் இல்லாமல் இருக்கும். அவர்கள் தண்ணீர் திறப்பதில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டால் உடனடியாக அதை சரி செய்து விடுவார்கள் என்றனர்.

The post தோவாளை சானலில் உடைப்பை சீரமைக்கும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Dholai ,Bhootapandi ,Dovalai ,Pachiparai dam ,Anantanar ,
× RELATED கீரிப்பாறை அருகே அரசு பஸ்சில் தகராறு 2...