
சிவகங்கை: எடப்பாடி தலைமையில் ஊழல் நிறைந்த ஆட்சி நடந்தது என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் நேற்று தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அளித்த பேட்டி: எடப்பாடி பழனிசாமி ஆடம்பரமாக மாநாடு நடத்துவதால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை. ஆட்களை பணம் கொடுத்து கூட்டி வந்து மாநாடு நடத்துகிறார்கள். பல கோடி செலவழித்து மாநாடு நடத்துவதால் யாருக்கும் எந்த பயனும் இல்லை. இது வெற்று விளம்பரம் தான்.
ஏற்கனவே எடப்பாடி தலைமையில் ஊழல் நிறைந்த ஆட்சி நடந்தது. நாடாளுமன்ற தேர்தலை எப்படி சந்திப்பது என்பது பற்றி விரைவில் முடிவெடுப்போம். தேர்தல் கூட்டணி பற்றி பின்னர் தெரியும். உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஒரு துறவி என்பதால் அவர் காலில் ரஜினிகாந்த் விழுந்திருப்பார். துறவியிடம் ஆசிர்வாதம் வாங்குவதற்கு வயது வித்தியாசம் இல்லை. யோகியை துறவியாக ரஜினிகாந்த் பார்த்திருப்பார். இவ்வாறு அவர் கூறினார்.
The post எடப்பாடி நடத்தியது ஊழல் ஆட்சி: டிடிவி தினகரன் சாடல் appeared first on Dinakaran.