×

கணவரின் 2வது திருமணத்தை தடுக்க கோரி 4 வயது மகனுடன் இளம்பெண் காவல்நிலையம் முன் தர்ணா

கழுகுமலை: தென்காசி மாவட்டம் ஆவாரந்தை கிராமத்தை சேர்ந்தவர் துரைப்பாண்டி மகள் காளீஸ்வரி (28). இவர் கோவில்பட்டி உள்ள கல்லூரியில் நர்சிங் முடித்துள்ளார். இவருக்கும் நெல்லையை சேர்ந்த ஆனந்த செல்வம் என்பவருக்கும் கடந்த 2017 ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. நான்கு மாதங்களே திருமண உறவு நீடித்த நிலையில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டனர்.

இதையடுத்து காளீஸ்வரி, நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வந்தார். அப்போது காளீஸ்வரிக்கும், அவரது உறவினரான தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை அண்ணா புது தெருவை சேர்ந்த ராஜபாண்டி மகன் ஆனந்த்பாபு (32)என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு கடந்த 2019 ம் வருடம் மார்ச் மாதம் நெல்லையில் 2வது இரண்டாவது திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு தற்போது ஆரிஸ் மித்ரதேவ் என்ற 4 வயது குழந்தை உள்ளது.

இந்நிலையில் காளீஸ்வரியுடன் நடந்த திருமணத்ைத கணவர் ஆனந்த்பாபுவும் அவரது பெற்றோரும் மறைத்துவிட்டு தென்காசி மாவட்டம் நரிக்குடியை சேர்ந்த வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நிச்சயித்து மதுரை திருப்பரங்குன்றத்தில் இன்று (ஞாயிறு) திருமணம் நடத்த ஏற்பாடு நடந்துள்ளது.

இதனையறிந்து அதிர்ச்சி அடைந்த காளீஸ்வரி, கழுகுமலையில் உள்ள 2வது கணவர் ஆனந்தபாபு வீட்டுக்குச் சென்று திருமணத்தை தடுத்து நிறுத்த முயன்றுள்ளார். அப்போது கணவர் ஆனந்த் பாபு மற்றும் அவரது தாய் முத்துலட்சுமி, தந்தை ராஜபாண்டி ஆகியோர் சேர்ந்து காளீஸ்வரையும் அவரது தாயாரையும் அவதூறாக பேசியதுடன் திருமணத்தை தடுத்து நிறுத்தினால் கொலை செய்துவிடுவோம் என மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதனால் பாதிக்கப்பட்ட காளீஸ்வரி, நேற்றிரவு கழுகுமலை காவல்நிலையத்தில் புகார் அளிக்க சென்றார். அப்போது அங்கிருந்த போலீசார், “நீங்கள் குடும்பம் நடத்தியது திருநெல்வேலி. எனவே திருநெல்வேலி சென்று புகார் அளியுங்கள்’’ என்று அறிவுறுத்தி உள்ளனர்.

இதையடுத்து திருநெல்வேலிக்கு சென்று புகார் அளிக்க முயன்றபோது திருப்பரங்குன்றத்தில் திருமணம் நடைபெற உள்ளதால் அங்குள்ள காவல்நிலையத்தில் புகார் அளிக்குமாறு போலீசார் தெரிவித்துள்ளனர். கணவரின் மோசடி மற்றும் போலீசாரின் அலைக்கழிப்பால் பாதிக்கப்பட்ட இளம்பெண் காளீஸ்வரி, தனது 4வயது குழந்தையுடன் கழுகுமலை காவல் நிலையம் முன் நேற்றிரவு தர்ணாவில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

The post கணவரின் 2வது திருமணத்தை தடுக்க கோரி 4 வயது மகனுடன் இளம்பெண் காவல்நிலையம் முன் தர்ணா appeared first on Dinakaran.

Tags : DARNA ,Khaliswari ,drapondi ,Awarandai Village, Tenkasi District ,Govilbatti ,Dharna ,Dinakaran ,
× RELATED வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்...