சென்னை: காஞ்சிபுரம் வேகவதி ஆற்றங்கரையில் வீடு கட்டி வாழும் ஏழை மக்களை வேறு இடங்களுக்கு மாற்றக்கூடாது என ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை : காஞ்சிபுரம் நகரத்தின் மையப் பகுதியில் வேதவதி ஆற்றங்கரையில் குடிசைமாற்று வாரிய வீடுகளிலும், தனி வீடுகளிலும் வாழ்ந்து வரும் 3524 குடும்பங்களில் 600 குடும்பத்தினரை அங்கிருந்து அகற்றி கீழ்க்கதிர்பூர் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு உள்ள குடிசைமாற்று வாரிய வீடுகளுக்கு அனுப்ப காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துவருகிறது.
வேதவதி ஆற்றின் நீரோட்டப் பாதையை அதிகரித்து கரைகளை கட்டுவதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் கூறுகிறது. இதை ஏற்க முடியாது. ஏற்கனவே காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக பொன்னையா இருந்தபோது பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாமல் கரைகள் அமைக்கப்படும் என்று அறிவித்து பணிகளை தொடங்கினார். அந்த பணிகள் திட்டமிட்டபடி முடிக்கப்பட்டிருந்தால் யாரையும் அகற்ற வேண்டிய தேவை இருந்திருக்காது.
வேகவதி ஆற்றங்கரையில் இருந்து அப்புறப்படுத்தப்பட்ட மக்களில் பெரும்பான்மையினர் நெசவுத்தொழில் செய்பவர்கள். நூற்றுக்கணக்கான பெண்கள் அருகில் உள்ள வீடுகளில் வீட்டு வேலை செய்பவர்கள். அவர்களுக்கு புதிய இடத்தில் வேலை வாய்ப்புகள் கிடைக்காது. எனவே இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு, காஞ்சிபுரம் வேகவதி ஆற்றங்கரையில் வாழும் மக்கள் அனைவரும் அதே இடத்தில் வாழ்வதை உறுதி செய்ய வேண்டும். அவர்களை அங்கிருந்து வெளியேற்றும் முடிவை கைவிடும்படி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கு அரசு ஆணையிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post காஞ்சிபுரம் வேகவதி ஆற்றங்கரையில் வீடு கட்டி வாழும் ஏழை மக்களை வேறு இடங்களுக்கு மாற்றக்கூடாது: ராமதாஸ் வேண்டுகோள் appeared first on Dinakaran.