×

’பார்ட்னராக சேர்க்காவிடில் தீர்த்துக்கட்டுவேன்’’ மசாஜ் பார்லர் உரிமையாளரை மிரட்டி பணம் பறிக்க முயற்சி: போலி பத்திரிகையாளர் கைது

வேளச்சேரி: சென்னை பள்ளிக்கரணை அடுத்த ஜல்லடியன்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் என்கிற பாஸ்கரன்(35). இவர் சேலையூரில் ‘ஸ்பா’ எனும் பெயரில் மசாஜ் சென்டர் நடத்தி வருகிறார். தாம்பரம் பகுதியை சேர்ந்த போலிபத்திரிகையாளர் வராகி என்பவர் தன்னையும் மசாஜ் பார்லரில் பார்ட்னராக சேர்த்துக்கொள்ளவேண்டும் என்று கார்த்திக்கை பலமுறை மிரட்டியதாக தெரிகிறது.

அத்துடன் தன்னை பார்ட்னராக சேர்த்துக்கொண்டால், போலீசாரிடம் இருந்து உங்களை காப்பாற்றுவேன், விபசார தடுப்பு பிரிவு போலீசாரிடம் சிக்கினால் சம்பந்தப்பட்ட பகுதியின் போலீசார்தான் நடத்த சொன்னார்கள் என, போலீசார் மீது பழி போடுங்கள். மீதியை நான் பார்த்துக்கொள்கிறேன்’ என்று கட்டாயப்படுத்தி உள்ளார். இதற்கு கார்த்திக் சம்மதிக்கவில்லை என்று தெரிகிறது.

இந்தநிலையில் கடந்த 6ம் தேதி, மேடவாக்கம் வெள்ளக்கல், சுடுகாடு அருகே பைக்கில் கார்த்திக் வந்தபோது எதிரே காரில் வந்த வராகி கார்த்திக்கை மறித்து பேசியுள்ளார். அப்போது அவர், ‘நான் சொல்வதை கேட்கவில்லை என்றால் உன்னுடைய வீடியோ ஒன்று என்னிடம் உள்ளது. அதை சமூக வலைத் தளங்களில் பதிவேற்றம் செய்து உன்னையும் உன் குடும்பத்தையும் அசிங்கப்படுத்தி விடுவேன்.

மேலும் எனக்கு 25 லட்ச ரூபாய் தரவில்லையென்றால் உன் குடும்ப உறுப்பினர்களை கொலை செய்துவிடுவேன். நான் சொல்வதுபோல் இப்போது பேசு என கார்த்திக்கை மிரட்டி, பேசவைத்து, ஒரு வீடியோவை உருவாக்கி அந்த வீடியோவை கடந்த 14ம் தேதி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இதுசம்பந்தமாக பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் கார்த்திக் அளித்த புகாரின்படி, போலீசார் வழக்குபதிவு செய்து போலி பத்திரிகையாளர் வராகியை நேற்றிரவு கைது செய்து காவல்நிலையம் அழைத்துவந்து விசாரித்தனர். இதன்பின்னர் அவர்மீது வழிமறித்து மிரட்டுவது, மிரட்டி பயத்தை ஏற்படுத்தி பணம் பறிப்பது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதன்பின்னர் இன்று அதிகாலை 2.30 மணி அளவில், நீதிபதி முன் ஆஜர்படுத்தி வராகியை சிறையில் அடைத்தனர்.

The post ’பார்ட்னராக சேர்க்காவிடில் தீர்த்துக்கட்டுவேன்’’ மசாஜ் பார்லர் உரிமையாளரை மிரட்டி பணம் பறிக்க முயற்சி: போலி பத்திரிகையாளர் கைது appeared first on Dinakaran.

Tags : Karthik ,Bhaskaran ,Jalladianpet ,Pallikarana, Chennai ,Selaiyur ,Dinakaran ,
× RELATED லாரி மோதி வாலிபர் பலி