×

வில்லியனூர் அருகே போதை ஆசாமிகள் வெறிச்செயல் தலையில் கல்லை போட்டு டிரைவர் படுகொலை சிறுவன் உட்பட 2 பேர் கைது

வில்லியனூர், ஆக. 19: வில்லியனூர் அருகே கஞ்சா போதையில் கார் டிரைவரை கல்லால் அடித்து கொலை செய்த சிறுவன் உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர். புதுவை வில்லியனூர் அருகே உள்ள அரியூர் பகுதியில் ஒருவரின் தலையில் கல்லைபோட்டு கொலை செய்துள்ளனர் என நேற்று காலை 6 மணிக்கு வில்லியனூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. மேற்கு எஸ்பி வம்சிதரெட்டி, இன்ஸ்பெக்டர் வேலய்யன், சப்-இன்ஸ்பெக்டர் ேவலு உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று இறந்தவரின் உடலை கைப்பற்றி கதிர்காமம் அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிறகு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தினர்.

போலீஸ் விசாரணையில் கூறப்படுவதாவது: இறந்தவர் புதுச்சேரி வில்லியனூர் அடுத்த தமிழக பகுதியான கண்டமங்கலம் கிழக்கு பாண்டி மெயின்ரோடு பகுதியை சேர்ந்த சண்முகசுந்தரம் (46) என்பதும், கார் டிரைவரான இவருக்கு சித்ரா என்ற மனைவியும், கார்த்திகேயன் (16) என்ற மகனும் உள்ளனர். தற்போது விழுப்புரம்-நாகப்பட்டினம் சாலை விரிவாக்க பணிகள் நடந்து வருவதால் கண்டமங்கலத்தில் இருந்து வீட்டை காலி செய்துவிட்டு அரியூர் அருகே உள்ள நவமால்மருதூர் பகுதியில் தனது குடும்பத்துடன் வாடகைக்கு குடியிருந்து வந்தார்.

நேற்று முன்தினம் நள்ளிரவு, சண்முக சுந்தரம் வேலை முடித்துவிட்டு புதுச்சேரியில் இருந்து பேருந்தில் வீட்டுக்கு வந்துள்ளார். அவருடன் கண்டமங்கலம் பகுதியை சேர்ந்த விக்கி என்கிற விக்னேஷ் (23), ஆரியப்பாளையம் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன் ஆகிய இருவரும் பேருந்தில் வந்துள்ளனர். அப்போது இவர்கள் இருவரும் பேருந்தின் படிக்கட்டில் நின்றுக்கொண்டு தகாத வார்த்தைகளால் பேசிக்கொண்டு வந்துள்ளனர். இதனிடையே கஞ்சா போதையில் இருந்த இவர்கள் இருவரும் சேர்ந்து சண்முகசுந்தரத்தை கிண்டல் செய்துள்ளனர். அமைதியாக இருந்த சண்முகசுந்தரம் அவரது பேருந்து நிறுத்தம் வந்தவுடன் அவர்களிடம் எங்கள் ஊருக்கு வந்தால் உன்னை என்ன செய்வேன் என்று தெரியாது என்று கூறியுள்ளார். இதனால் இவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பிறகு அரியூர் பேருந்து நிறுத்தம் வந்தவுடன் சண்முகசுந்தரம் பேருந்தில் இருந்து இறங்கி தனது வீட்டுக்கு நடந்து சென்றுள்ளார்.

உடனே விக்கியும், சிறுவனும் பேருந்தில் இருந்து இறங்கி சென்று சண்முகசுந்தரத்திடம் உங்கள் ஊருக்கு வந்துவிட்டோம் என்ன செய்வாய் எனக்கூறி தகராறு செய்துள்ளனர். பிறகு இவர்கள் இருவரும் சேர்ந்து
சண்முகசுந்தரத்தை கீழே தள்ளி அருகில் கிடந்த கல்லை எடுத்து தலையில் போட்டு கொடூரமாக கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து தப்பியோடிய கொலை
குற்றவாளிகள் இருவரையும் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post வில்லியனூர் அருகே போதை ஆசாமிகள் வெறிச்செயல் தலையில் கல்லை போட்டு டிரைவர் படுகொலை சிறுவன் உட்பட 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Villianore ,Villianore, Va. 19 ,Villianur ,
× RELATED புதுச்சேரி அடுத்த சேதராபட்டு...