×

போலீசார் போல் நடித்து ரூ.3.5 லட்சம் பறித்த இருவர் சிக்கினர்: வங்கி கொள்ளையில் தொடர்புடையவர்கள்

அண்ணாநகர்: சூளைமேடு பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் ராவ் (44). இவர், வெளிநாட்டு பணத்தை இந்திய ரூபாயாக மாற்றிக் கொடுக்கும் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர், கடந்த 13ம் தேதி இரவு ரூ.3.5 லட்சத்துடன் பைக்கில் அண்ணாநகர் நோக்கி சென்றார். அப்போது, போலீஸ் என கூறி, அவரை வழிமறித்த 2 பேர், முறையான ஆவணம் இல்லை, எனக்கூறி, அவர் வைத்திருந்த ரூ.3.5 லட்சத்தை பறிமுதல் செய்துவிட்டு, அண்ணா நகர் காவல் நிலையத்தில் ஆவணங்களை காட்டி பணத்தை பெற்றுக் கொள்ளுங்கள் எனக் கூறிவிட்டு சென்றனர். விசாரணையில், அந்த 2 பேர் போலீஸ் இல்லை, என தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில், அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிசிடிவி கேமராவில் பதிவான பைக் பதிவெண்ணை வைத்து விசாரித்தனர். அதில், வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த சந்தோஷ்குமார் (35), பாலாஜி (30) ஆகியோர், பிரகாஷ் ராவிடம் ரூ.3.5 லட்சத்தை பறித்து சென்றது தெரிய வந்தது. அவர்களை கைது செய்தனர். விசாரணையில், இவர்கள் கடந்த 2022ம் ஆண்டு அரும்பாக்கத்தில் உள்ள தனியார் வங்கியில் 32 கிலோ தங்கம் கொள்ளையடித்த வழக்கில் கைதாகி சிறை சென்றதும், பின்னர் கடந்த 3 மாதத்துக்கு முன் ஜாமீனில் வெளிவந்து, போலீசார் போல் நடித்து பலரிடம் பணம் பறித்ததும் தெரிந்தது. அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சம் மற்றும் பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர், 2 பேரையும் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

The post போலீசார் போல் நடித்து ரூ.3.5 லட்சம் பறித்த இருவர் சிக்கினர்: வங்கி கொள்ளையில் தொடர்புடையவர்கள் appeared first on Dinakaran.

Tags : Annanagar ,Prakash Rao ,Choolaimedu ,Dinakaran ,
× RELATED சாரம் சரிந்து தொழிலாளி பலி தனியார்...