×

குடிபழக்கத்தை கண்டித்ததால் தந்தையை அடித்து கொன்ற மகன் கைது

திருக்கழுக்குன்றம்: மதுபோதையில் தந்தையை கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர். திருக்கழுக்குன்றம், பரமசிவம் நகர் பகுதியை சேர்ந்தவர் கேசவன் (55). இவர், தோட்ட வேலை செய்து வருகிறார். இவரது மகன் மணிகண்டன் (31). இவர், பெயின்டிங் மற்றும் எலக்ட்ரிக்கல் வேலை செய்து வருகிறார். இவருக்கு, குடிப்பழக்கம் உள்ளது. இதை தந்தை கேசவன் கண்டித்து வந்துள்ளார். இதனால், தந்தைக்கும் மகனுக்கும் இடையே அடிக்கடி வாய்த்தகராறு ஏற்படுவது வழக்கம்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மணிகண்டன், மதுபோதையில் வீடு திரும்பியுள்ளார். இதை தந்தை கேசவன் கண்டித்துள்ளார். இதனால், இருவருக்கும் இடையே வழக்கம்போல் வாக்குவாதம் முற்றியது. இதில், ஆத்திரம் அடைந்த மணிகண்டன், தந்தை கேசவனை கைகளால் சரமாரி தாக்கி, அவரது மார்பில் எட்டி உதைத்து கீழே தள்ளியுள்ளார். இதனால், கேசவன் ரத்த காயங்களுடன் மயக்கமடைந்தார். இதை பார்த்ததும் மதுபோதையில் இருந்த மணிகண்டன் அங்கிருந்து தப்பியோடி விட்டார்.

கேசவனை அக்கம் பக்கத்தினர் திருக்கழுக்குன்றம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கெனவே கேசவன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தகவலறிந்த திருக்கழுக்குன்றம் போலீசார் விரைந்து வந்தனர். அங்கு கேசவனின் சடலத்தை கைப்பற்றி, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.  இப்புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, தந்தையை தாக்கி கொலை செய்துவிட்டு தலைமறைவான மகன் மணிகண்டனை கைது செய்து விசாரிக்கின்றனர்.

The post குடிபழக்கத்தை கண்டித்ததால் தந்தையை அடித்து கொன்ற மகன் கைது appeared first on Dinakaran.

Tags : Thirukkalukkunram ,Kesavan ,Paramasivam Nagar ,
× RELATED கடலில் பிளாஸ்டிக், ரசாயனம் கலப்பதை தடுக்க விழிப்புணர்வு படகு பயணம்