×

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் இதுவரை 1.54 கோடி விண்ணப்பங்கள்: இன்று, நாளை மற்றும் 20ம் தேதி சிறப்பு முகாம்

சென்னை: தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை: பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பங்களை பதிவு செய்யும் முகாமை முதல்வர் மு.க.ஸ்டாலின் தர்மபுரி மாவட்டம், தொப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தொடங்கி வைத்து, விண்ணப்பப் பதிவு முகாம்கள் இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டுள்ளது.
முதற்கட்ட முகாம்கள் ஜூலை 24ம் தேதி முதல் ஆகஸ்ட் 4ம் தேதி வரை நடந்தது. இரண்டாம் கட்ட முகாம்கள் ஆகஸ்ட் 5ம் தேதி முதல் 14ம் தேதி வரை நடந்தது. இதுவரை 1.54 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டு கைபேசி செயலி வழியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதன் தொடர்ச்சியாக வருவாய்த் துறையின் கீழ் மாற்றுத்திறனாளிகள், ஓய்வூதியம் பெறும் மாற்றுத்திறனாளிகள் தவிர, அக்குடும்பத்தில் உள்ள தகுதி வாய்ந்த பெண்கள் மற்றும் இந்திரா காந்தி முதியோர் ஓய்வூதிய தேசிய திட்டம், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியம் ஆகிய திட்டங்களில் முதியோர் ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள ஓய்வூதியதாரர் அல்லாத தகுதி வாய்ந்த பெண்களும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு விதிவிலக்கு அளிக்கப்பட்ட குடும்பங்களில் உள்ள தகுதிவாய்ந்த மகளிர் மற்றும் ஏற்கனவே முகாம்களில் பதிவு செய்ய நிர்ணயிக்கப்பட்ட தேதிகளில் வருகை புரிய இயலாத குடும்ப தலைவிகள் விண்ணப்பங்கள் பதிவு செய்ய இன்று, நாளை மற்றும் 20 ஆகிய மூன்று நாட்கள் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.

மேற்படி முகாம்களில் பெறப்பட்ட விண்ணப்பங்களில் அளிக்கப்பட்ட தகவல்களை தேவையேற்படின் சரிபார்க்க களஆய்வு மேற்கொள்ளப்படும். அப்போது விண்ணப்பத்தாரர்கள் களஆய்விற்கு வரும் அலுவலர்களுக்கு உரிய தகவல்களை அளித்து தகுந்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும். சென்னை தலைமை செயலகத்தில் நேற்று தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா விண்ணப்பங்கள் பெறுதல், களஆய்வு மேற்கொள்ளுதல் போன்ற பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் காணொலி வாயிலாக ஆய்வுக்கூட்டம் நடத்தினார். இதில் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

The post கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் இதுவரை 1.54 கோடி விண்ணப்பங்கள்: இன்று, நாளை மற்றும் 20ம் தேதி சிறப்பு முகாம் appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Tamil Nadu Government ,
× RELATED மலைச்சரிவுகளைத் தடுத்து மக்களைக்...