திருச்சி: திருச்சி காஜாமலை காலனியில் உள்ள இன்பண்ட் ஜீசஸ் உயர்நிலைப்பள்ளியில் கடந்த 1983-84ம் கல்வியாண்டில் 8ம் வகுப்பு படித்த மாணவ, மாணவியர் பலரும் தற்போது அரசு, தனியார் நிறுவனங்கள் மற்றும் வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் பணியாற்றி வருகின்றனர். இதில், திருச்சி கே.கே.நகர் எல்ஐசி காலனியை சேர்ந்த தொழிலதிபர் சுரேஷ்குமாரும் ஒருவர். இவர் அண்மையில் தான் பயின்ற பள்ளிக்குச் செல்லும் நிலை ஏற்பட்டது. அப்போது கடந்த கால பள்ளிப்பருவத்தை பள்ளி நிர்வாகிகளுடன் நினைவு கூர்ந்தார். பின்னர் பள்ளியின் நிலை குறித்து கேட்டறிந்த அவர், பள்ளியில் அடிப்படை வசதிகள் தேவை என்பதை அறிந்துள்ளார்.
இதனையடுத்து அவருடன் பயின்ற மாணவ, மாணவிகளில் 8 பெண்கள் உள்பட 22 பேரை கண்டறிந்து, அவர்களை தொடர்பு கொண்டு பள்ளியின் நிலையைக் கூறி பள்ளிக்கு ஏதாவது செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். அதன் பேரில் அண்மையில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு பள்ளி வளாகத்திலேயே நடைபெற்றது. இந்த சந்திப்பு நிகழ்வில் உள்ளூர், வெளியூர் மற்றும் வெளிநாட்டில் இருந்தும் நேரடியாகவும், காணொலி மூலமும் முன்னாள் மாணவர்கள் பங்கேற்றனர். பின்னர் தாங்கள் படித்த பள்ளிக்கு கட்டிட வசதிகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை ஏற்படுத்த முடிவு செய்தனர். இனி வரும் காலங்களில் ஆண்டுதோறும் இந்த சந்திப்பை நடத்துவது என்றும், பள்ளியில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
The post திருச்சி பள்ளியில் 40 ஆண்டுகளுக்கு பின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு appeared first on Dinakaran.