×

கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்துக்கு கிருஷ்ணா நீர்வரத்து அதிகரிப்பு

ஊத்துக்கோட்டை: ஆந்திர மாநிலத்தில் தொடர் மழை காரணமாக, கண்டலேறு அணையில் இருந்து நேற்றிரவு வரை தமிழக எல்லையில் கிருஷ்ணா நீர்வரத்து அதிகரித்துள்ளது என தமிழக அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக ஆந்திரா-தமிழக நதிநீர் ஒப்பந்தப்படி, தமிழகத்துக்கு ஆண்டுதோறும் ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டிஎம்சி, ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டிஎம்சி, 3 டிஎம்சி சேதாரம் என மொத்தம் 15 டிஎம்சி தண்ணீரை ஆந்திர அரசு வழங்க வேண்டும். தற்போது கண்டலேறு அணையில் போதிய நீர் இருப்பு உள்ளதால், தெலுங்கு-கங்கா ஒப்பந்தப்படி 8 டிஎம்சிக்கு மேல் தண்ணீர் இருந்தால், தமிழகத்துக்கு கூடுதலாக தண்ணீர் திறந்துவிடலாம்.

இதற்கிடையே கடந்த ஏப்ரல் மாதம் தமிழக நீர்வளத்துறை அதிகாரிகளின் கோரிக்கையை ஏற்று, கடந்த மே 1ம் தேதி கண்டலேறு அணையில் இருந்து வினாடிக்கு முதலில் 500 கன அடியும், பின்னர் படிப்படியாக உயர்த்தி 2 ஆயிரம் கன அடி தண்ணீரை ஆந்திர நீர்வளத்துறை அதிகாரிகளால் திறந்துவிடப்பட்டது. இந்த நீர், தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை-தாமரைக்குப்பம் ஜீரோ பாயிண்டுக்கு கடந்த மே 3ம் தேதி வந்தடைந்தது. இதைத் தொடர்ந்து, கடந்த மே 12ம் தேதி ஜீரோ பாயிண்டுக்கு 375 கன அடி நீர் வந்தது. பிறகு, மீண்டும் கூடுதலாக 450 கன அடி உயர்த்தி, மொத்தம் 2450 கன அடி தண்ணீர் கண்டலேறு அணையிலிருந்து திறக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த மே 1ம் தேதி முதல் ஜூலை 15ம் தேதிவரை ஆந்திராவின் கண்டேலறு அணையில் இருந்து தமிழகத்துக்கு 2000 மில்லியன் கன அடி, அதாவது 2 டிஎம்சி தண்ணீர் கிடைத்துள்ளது. கடந்த வாரம் கண்டலேறு அணையில் 930 கன அடியாக தண்ணீர் குறைத்து திறக்கப்பட்டதால், ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்டில் வெறும் 33 கன அடி தண்ணீர் மட்டுமே வந்தது. எனினும், கடந்த சில நாட்களாக ஆந்திர மாநிலத்தில் தொடர் மழை பெய்து வருவதால், நேற்றிரவு வரை தமிழக எல்லையான ஜீரோ பாயிண்டுக்கு 195 கன அடி நீர் கூடுதலாக வந்து கொண்டிருக்கிறது. இதன்மூலம் தமிழகத்துக்கு இரண்டரை டிஎம்சிக்குமேல் தண்ணீர் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

The post கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்துக்கு கிருஷ்ணா நீர்வரத்து அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Krishna ,Kandaleru Dam ,Tamil Nadu ,Oothukottai ,Andhra ,Dinakaran ,
× RELATED பாலியல் தொல்லை கொடுத்தாக முன்னாள்...