×

திமுக போராட்டம் நடத்துவதால் அதிமுக மாநாட்டிற்கு கூட்டம் வராது என இபிஎஸ் பயப்படுகிறாரா?: சட்டத்துறை அமைச்சர் ரகுபதி!

புதுக்கோட்டை: நீட் தேர்வு வேண்டாம் என்பதுதான் ஒரே நிலைப்பாடு, இதில் இரட்டை வேடம் எதுவும் இல்லை என தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். திமுக போராட்டம் நடத்துவதால் அதிமுக மாநாட்டிற்கு கூட்டம் வராது என இபிஎஸ் பயப்படுகிறாரா? என கேள்வி எழுப்பிய ரகுபதி, அதிமுக மாநாட்டிற்கு மக்களும் போக மாட்டார்கள் என்பதால் அர்த்தமற்ற குற்றச்சாட்டை வைக்கிறார்கள் என தெரிவித்திருக்கிறார். கல்வியை பொதுப் பட்டியலிருந்து மாநில பட்டியலில் கொண்டு வந்து நிச்சயமாக நீட் தேர்வை ரத்து செய்ய முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.

புதுக்கோட்டை மாலையீடு அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்று வரும் புதுக்கோட்டை மாவட்ட விவசாய இடுபொருள் விற்பனையாளர் சங்க பொது குழு கூட்டத்தில் அமைச்சர் ரகுபதி கலந்துகொண்டார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர்; நீட் தேர்வு வேண்டாம் என்பதுதான் திமுகவின் ஒரே நிலைப்பாடு, இதை புரியாதவர்கள் இரட்டை நிலைப்பாடு என்று சொன்னால் அவர்கள் தான் இதற்கு விளக்கம் தர வேண்டுமே தவிர, நாங்கள் விளக்கம் தர வேண்டிய அவசியம் இல்லை.

எங்களுடைய நிலைப்பாடு நீட் தேர்வு தேவையில்லை என்பதுதான், கல்வி பொதுப்பட்டியலில் உள்ளது அதை மாநில அரசுக்கு மாற்ற வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் சுதந்திர தின விழா உரையில் தெளிவாக தெரிவித்துள்ளார். கல்வியை மாநில பட்டியலில் கொண்டு வந்து நிச்சயமாக நீட் தேர்வை ரத்து செய்ய முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. அதிமுக மாநாட்டிற்கு கூட்டம் வராது என்று எடப்பாடி பழனிச்சாமி தற்போது பயப்படுகிறாரா? அனைத்து ஊர்களிலும் சென்று வாருங்கள், திருப்பரங்குன்றம் கோயிலுக்கும் மீனாட்சி அம்மனை பார்ப்பதற்கும் அழகர் மலைக்கும் போகலாம் என்று கூப்பிடுகின்றனர்.

அதற்கே ஆட்கள் செல்ல மறுக்கிறார்கள் என்றால் நாங்கள் என்ன செய்வது, நாங்கள் எங்களது கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரதம் அறப்போராட்டம் வருகின்ற 20-ம் தேதி நடத்துகிறோம். எங்களது ஆட்கள் அங்கு போகப் போறது கிடையாது, பொதுமக்கள் யாரையாவது அதிமுக கூட்டத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும் ஆனால் பொதுமக்களும் அங்கு போக மாட்டார்கள்.

எடப்பாடி பழனிச்சாமி கருத்தைப் பொறுத்தவரை தொண்டர்களும் அவர்களது கட்சியில் இல்லை என்பதை தான் காட்டுகிறது. அதனால் அவர் கூறுவது அர்த்தமில்லாத குற்றச்சாட்டு. காவிரி நீர் விவகாரத்தைப் பொறுத்தவரை நீதிமன்றத்தை நாடியுள்ளோம். 10 டிஎம்சி கட்டாயம் அவர்கள் திறந்து விட்டு தான் ஆக வேண்டும். அதற்கு எந்தவித தடையும் இருக்க வாய்ப்பு கிடையாது என்று கூறியுள்ளார்.

 

The post திமுக போராட்டம் நடத்துவதால் அதிமுக மாநாட்டிற்கு கூட்டம் வராது என இபிஎஸ் பயப்படுகிறாரா?: சட்டத்துறை அமைச்சர் ரகுபதி! appeared first on Dinakaran.

Tags : EPS ,Dishagam ,Law Minister ,Ragupathi ,Pudukkotta ,Tamil Nadu Legislative Department ,Djagam ,Ragupati ,
× RELATED ஏற்காடு விபத்து: காயம் அடைந்தோருக்கு இபிஎஸ் ஆறுதல்