×

டிவி நடிகை சித்ரா மரண வழக்கை சென்னையில் விசாரிக்க கோரி தந்தை மனு: ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை

சென்னை: சின்னத்திரை நடிகை சித்ரா மரணம் தொடர்பான வழக்கின் விசாரணையை திருவள்ளூர் மகளிர் நீதிமன்றத்தில் இருந்து சென்னைக்கு மாற்றக் கோரி அவரது தந்தை சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். தனியார் தொலைக்காட்சி தொடர் நடிகை சித்ரா கடந்த 2020ம் ஆண்டு டிசம்பரில் படப்பிடிப்பிற்காக சென்றிருந்த நிலையில், சென்னை அடுத்த நசரத்பேட்டையில் உள்ள ஹோட்டல் அறையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக நசரத்பேட்டை காவல் நிலைய போலீசார், சித்ராவின் கணவர் ஹேம்நாத் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கின் விசாரணை திருவள்ளூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கின் விசாரணையை சென்னையில் உள்ள அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என்றும், அதன்பின் விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட கோரி சித்ராவின் தந்தை காமராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். மனுவில், தன் மீதான குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக் கோரி ஹேம்நாத் தொடர்ந்த மனுவை கடந்த ஆண்டு தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம், விசாரணையை விரைந்து முடிக்க உத்தரவிட்ட நிலையிலும் விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை.

விசாரணையை இழுத்தடிக்கும் நோக்கில் வேண்டுமென்றே ஹேம்நாத் பல்வேறு மனுக்களை தாக்கல் செய்துவருகிறார். 2021ம் ஆண்டிலிருந்தே வழக்கின் விசாரணை குற்றச்சாட்டுப் பதிவு செய்யும் கட்டத்திலேயே உள்ளது. வயது முதுமை காரணமாக தன்னால் வழக்கின் விசாரணைக்காக திருவள்ளூர் சென்று வருவதற்கு சிரமமாக இருப்பதாகவும், மேலும் வழக்கில் சாட்சிகளாக உள்ள நபர்களும் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்திலேயே இருப்பதால் வழக்கை திருவள்ளூர் நீதிமன்றத்தில் இருந்து சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும். வழக்கின் விசாரணையை விரைந்து முடிக்குமாறு உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

The post டிவி நடிகை சித்ரா மரண வழக்கை சென்னையில் விசாரிக்க கோரி தந்தை மனு: ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Chitra ,Chennai ,Tiruvallur Women's Court ,Manu ,
× RELATED கார் மீது லாரி மோதி விபத்து 5 பேர் பலி