×

ஹிஜாவு நிறுவனம் ரூ4,620 கோடி மோசடி; பெண் இயக்குனரின் ஜாமீன் மனு தள்ளுபடி: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சென்னை: அதிக வட்டி தருவதாக கூறி பொதுமக்களிடம பெற்ற ரூ4,620 கோடியை மோசடி செய்த வழக்கில், ஹிஜாவு நிதி நிறுவன முக்கிய நபரான கலைச்செல்வியின் ஜாமீன் மனுவை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது. சென்னையில் இயங்கிய ஹிஜாவு நிதி நிறுவனம், 15% வட்டி தருவதாகக் கூறி, பொதுமக்களிடம் இருந்து 4,620 கோடி ரூபாய் முதலீடுகள் பெற்று மோசடி செய்தது. இந்த புகாரின் பேரில், பொருளாதாரக் குற்றப் பிரிவுவினர் இதுவரை 14 பேரை கைது செய்துள்ளனர். இந்த வழக்கில், நிறுவன இயக்குநர் அலெக்சாண்டர் மற்றும் முகவர்கள் உள்ளிட்ட 15 பேர் இன்னும் தலைமறைவாக உள்ளனர். இவர்களுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நிதிநிறுவனத்தின் முக்கிய நிர்வாகியின் மனைவியும் ஹிஜாவு நிறுவன துணை நிறுவன இயக்குனருமான கலைச்செல்வி நிதி நிறுவன மோசடி வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில், கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ் ஆஜராகி, சுமார் 89 ஆயிரம் முதலீட்டாளர்களிடம், சுமார் 4,620 கோடி ரூபாய் முதலீடுகள் பெற்று மோசடி செய்துள்ளதாகவும், 16,500 நபர்கள் இதுவரை புகார்கள் அளித்துள்ளதாகவும், 40 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மனுதாரருக்கு ஜாமீன் வழங்கினால் வெளிநாடு தப்பிசெல்லவும் சாட்சிகள் மற்றும் ஆவணங்களை கலைக்க வாய்ப்புள்ளது. மேலும் மீட்க வேண்டிய தொகை அதிகம். எனவே ஜாமீன் வழங்கக் கூடாது என்று வாதிட்டார். அப்போது, முதலீட்டாளர் ஜெயலட்சுமி என்பவர் தரப்பில் வழக்கறிஞர் டி.செல்வம் ஆஜராகி ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து இடையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த வாதங்களை ஏற்ற நீதிபதி, ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

The post ஹிஜாவு நிறுவனம் ரூ4,620 கோடி மோசடி; பெண் இயக்குனரின் ஜாமீன் மனு தள்ளுபடி: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Hijavu Company ,Chennai ,Hijavu Finance Company ,Dinakaran ,
× RELATED சிறுமியை வளர்ப்பு நாய்கள் கடித்த...