×

திருவள்ளூர் மாவட்டத்தில் நாளையும், 24ம் தேதியும் குடற்புழு நீக்க மாத்திரை

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் அறிக்கை; திருவள்ளூர் மாவட்டத்தில் குடற்புழு நீக்க நாள் நாளையும் விடுபட்ட குழந்தைகளுக்கான சிறப்பு முகாம் வருகின்ற 24ம் தேதியும் நடைபெறுகிறது. இதில் 1 முதல் 19 வயது வரை உள்ள குழந்தைகள் மற்றும் 20 முதல் 30 வயதுடைய பெண்களுக்கு (கருவுற்ற மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் தவிர) அனைவருக்கும் அல்பெண்டசோல் மாத்திரை அங்கன்வாடி மையங்கள், அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் ரத்த சோகை, சத்து குறைபாடு, சோர்வு, பசியின்மை, வயிற்று வலி மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பாதிப்பில் இருந்து குழந்தைகளை காப்பாற்ற மாவட்டத்தில் 1 முதல் 19 வயது வரை உள்ள 7 லட்சத்து ஆயிரத்து 243 குழந்தைகள் மற்றும் 20 முதல் 30 வயது வரை உள்ள 2 லட்சத்து 20 ஆயிரத்து 122 பெண்களுக்கு அல்பெண்டோசோல் மாத்திரைகள் வழங்கப்பட உள்ளது.

1 முதல் 2 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு அல்பெண்டசோல் 1/2 மாத்திரை 200 மில்லி கிராம், 2 முதல் 19 வயதுவரை உள்ள குழந்தைகளுக்கு -அல்பெண்டசோல் 1 மாத்திரை 400 மில்லி கிராம், 20 முதல் 30 வயதுவரை உள்ள பெண்களுக்கு (கருவுற்ற, பாலூட்டும் தாய்மார்கள் தவிர) அல்பெண்டசோல் 1 மாத்திரை 400 மில்லி கிராம் என்ற விகிதத்தின்படி மாத்திரை வழங்கப்படும். சுத்தமான குடிநீர், சுகாதாரமான உணவு உண்ணுதல், நகங்களை வெட்டி கைகளை சுத்தமாக வைத்திருத்தல், காய்கறி, பழங்களை கழுவிய பின் உட்கொள்ளுதல், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்தல், திறந்தவெளியில் மலம் கழிப்பதை தவிர்த்து கழிவறைகளை பயன்படுத்துதல், உணவுக்கு முன்னும் கழிவறை பயன்படுத்திய பின்னும் சோப்பு போட்டு கைகளை கழுவுதல் போன்ற தடுப்பு நடவடிக்கை மேற்கொள்வதன் மூலம் குடற்புழு தொற்றில் இருந்து பாதுக்காக்கலாம்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் 1428 பள்ளிகளிலும் 456 தனியார் பள்ளிகளிலும் 68 கல்லூரிகளிலும் 1756 அங்கன்வாடி மையங்களிலும் 63 குழந்தை இல்லங்களிலும் மொத்தம் 3771 மையங்களில் ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மூலம் வழங்கப்படுகிறது. எனவே அனைவரும் குடற்புழு நீக்க மாத்திரையை உட்கொண்டு குடற்புழு தொற்றினால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

The post திருவள்ளூர் மாவட்டத்தில் நாளையும், 24ம் தேதியும் குடற்புழு நீக்க மாத்திரை appeared first on Dinakaran.

Tags : Tiruvallur district ,Thiruvallur ,Alby John Varghese ,Dinakaran ,
× RELATED ஆடுகளை தாக்கும் தொற்று நோய்களை தடுப்பது எப்படி?