×

மதுராந்தகம் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து; 3 பேர் உடல் நசுங்கி பலி..!!

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காரில் இருந்த மூவரும் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலை வழியாக இன்று காலை திண்டுக்கல்லில் இருந்து சென்னை நோக்கி கார் ஒன்று வந்தது. கார், அய்யனார் கோவில் அருகே சென்றுக் கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த 20 அடி பள்ளத்தில் விழுந்தது. இதில் காரில் இருந்த 3 ஆண்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தகவல் அறிந்து அங்கு விரைந்த போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் வாகனத்தில் இருந்து 3 உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில் காரில் இருந்தவர்கள் ஐ.டி. நிறுவனம் ஒன்றில் பணியில் சேருவதற்காக இன்று காலை சென்னை வந்திருப்பது தெரியவந்துள்ளது. இதேபோல ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் பெருந்துறையை சேர்ந்த பெரியசாமி உயிரிழந்தார்.

அவர் குடும்பத்துடன் ராமேஸ்வரத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்துவிட்டு திரும்பியபோது கார் விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த 10 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் பலத்த காயமடைந்த 3 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார்கள். சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

The post மதுராந்தகம் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து; 3 பேர் உடல் நசுங்கி பலி..!! appeared first on Dinakaran.

Tags : Madurathangam ,Chengalpattu ,Madurandakam, Chengalpattu district ,
× RELATED மதுராந்தகம் பகுதியில் நீர் ஆவியாவதை...